கோவை, மே 26–
‘‘போலீசாரின் மன அழுத்தத்தை போக்க உதவும் தமிழக காவல் துறையின், ‘மகிழ்ச்சி’ திட்டத்தை பார்த்து, மத்திய அரசும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இத்திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது,’’ என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பெருமையாக தெரிவித்தார்.
போலீசாருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கி, மகிழ்ச்சியாக வாழ, தமிழக காவல் துறை, மதுரை எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளையுடன் இணைந்து, மகிழ்ச்சி என்ற திட்டத்தை துவக்கியது.
சென்னையில் இத்திட்டம் துவக்கியபோது, ஏராளமான போலீசார் மற்றும் குடும்பத்தினர் பயனடைந்தனர். தொடர்ந்து, மதுரை, திருவாரூருக்கு அடுத்தபடியாக, திருப்பூர், சேலம், கோவையில் துவக்கப்பட்டுள்ளது.மகிழ்ச்சி திட்ட மையத்தை டிஜிபி திறந்து வைத்தார். விழாவில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசுகையில், ‘‘எல்லா துறையினருக்கும் மன அழுத்தம் வருகிறது. இது குடும்பத்தையும் பாதிக்கும். மன பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
‘‘அடுத்த கட்டமாக, வேலூரிலும் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தின் வெற்றியை பார்த்து, மத்திய அரசும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு, இத்திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது,’’ என்றார்.
எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘‘போலீசாரிடம் எடுத்த கணக்கெடுப்பில், 64 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. 4 சதவீதத்தினர் தற்கொலை எண்ணத்துக்கு செல்கின்றனர். இத்திட்டத்தால் மன அழுத்தம் போக்கி, மகிழ்ச்சியாக வாழ வழி உருவாக்குகிறோம்,’’ என்றார்.
மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் பேசுகையில், ‘‘மன அழுத்தத்தை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால், கையாள கற்றுக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.