tamilnadu epaper

ஆகச்சிறந்த பெண்மணிகள்

ஆகச்சிறந்த பெண்மணிகள்


டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி


சாதித்த, சாதிக்கத் துடிக்கும், சாதித்துக் கொண்டிருக்கும் பெண்மணிகளைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.


பெண்மை உன்னதமானது. புனிதமானது. தற்போது நாம் தெரிந்து கொள்ள இருப்பது ஸ்ரீமதி டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அவர்களைப் பற்றியதாகும்.  


இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்னும் ஊரில் நாராயணசாமி ஐயர் சந்திரம்மாள் தம்பதிக்கு மகளாக 1886ல் பிறந்தார்.


கிட்டத்தட்ட பாரதியாரின் வயதை ஒத்தவர். நிஜமான பாரதி கண்ட புதுமைப் பெண் என்றால் மிகையாகாது.


'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்னும் கால கட்டத்தில் பிறந்து, போராடி படித்து பட்டம் பெற்ற சிறந்த மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார். 


சிறுவயதிலேயே மிகவும் துறுதுறுவென இருந்த முத்துலெட்சுமி அப்பாவின் செல்லப் பெண்ணும் கூட. பலரும் தயங்கும் ஆண்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்தார். நன்கு படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அப்பாவின், ஊராரின் பாராட்டுக்களைப் பெற்றார். வயதுக்கு வந்த பெண்ணுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்றவர்களைச் சற்று புறந்தள்ளி கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தார்.


எனினும் இவருக்கு ஆண்கள் பயிலும் கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது. இடம் கிடைக்கவில்லை.


ஆனால் புதுக்கோட்டை ஸமஸ்தானத்தின் மகாராஜா உதவியால் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. இவரது தாய் சந்திரம்மாள் தாசி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வப்போது இவர் கல்லூரி மேலிடத்தினரால் கண்காணிக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். எதற்கும் அஞ்சாத, கலங்காத முத்துலெட்சுமி நல்லமுறையில் படித்து பட்டம் பெற்று ஊருக்கும் குடும்பத்தாருக்கும் மீண்டும் பெருமை சேர்த்தார்.


பெண்களுக்கென பெண் சுதந்திரத்திற்கென எத்தனையோ தடைகள் இருந்த போதிலும் அவையெல்லாம் தாண்டி தனது கல்வியைத் தொடர்ந்தார். தனது படிக்கும் ஆர்வத்தைக் கைவிடவும் இல்லை. பின்னோக்கிச் செல்லவும் இல்லை. படிப்பதில் முழு கவனமும், வெற்றியும் பெற்றார்.  


கல்லூரிப் படிப்பில் பெருமைமிகு வெற்றி பெற்று முதல் மாணவியாய் தேர்ச்சி பெற்றார். ஆணுக்குப் பெண்ணிங்கு குறைந்தவரில்லை என்பதை நிரூபித்தார் முத்துலெட்சுமி அம்மையார் என்றால் மிகையாகாது. 


பிறகு தனது மேற்படிப்பைத் தொடர சென்னைக்கு வந்தார். தனது தீராத தாகமான மருத்துவத்துறையை

அவர் தேர்ந்தெடுத்தார். அதன்படி 

1907 ல் சென்னை மாகாணம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அனைத்து வருடமும் எல்லாப் பாடங்களிலும் மிகச் சிறப்பாகப் படித்து 1912 ல் மருத்துவம் பட்டம் பெற்றார். இவர் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரியவரும் ஆனார். 


மருத்துவத் துறையிலும் பற்பல சாதனைகள் புரிந்தார். 

பின்னர் 1926ல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சட்ட மேலவை உறுப்பினரானார். 

மாநில சமூக நலக்குழுவின் ஆலோசகராகவும் திகழ்ந்தார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண்மணி எனும் பட்டம் பெற்றார்.


அவர் பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தார். 'தேவதாசி' திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். பெண் கல்வி, பெண் தொழில், பெண் முன்னேற்றம் பல வகையிலும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.


பேறு காலத்தில் பெண்களுக்கு மகப்பேறு உதவிகள், அரசாங்கத்தின் மூலம் கிடைக்கச் செய்தார். ஆதரவற்ற பெண்களுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் என்று சென்னையில் 'அவ்வை இல்லத்தை'அவர் தொடங்கினார். அதை மிக நேர்த்தியாகவும் பராமரித்து வந்தார்.


அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் அறுவைச் சிகிச்சை செய்யும் பெண் மருத்துவராகத் திகழ்ந்தார்.  


பல்வேறு போராட்டங்கள், நலத்திட்டங்கள், பெண்கள் முன்னேற்றம் மற்றும் மருத்துவம் என்று இயங்கிக் கொண்டிருந்த இவரது பெயர் 1947ம் ஆண்டு செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியில் சேர்க்கப்பட்டது.


இது பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தது எனலாம். நாட்டையே திரும்பிப் பார்க்க

வைத்தது. 


மருத்துவப் படிப்பை முடித்து வெளிவரும்போது பெண்கள் கற்கவேண்டியது அவசியமற்றது என்ற காலகட்டத்தில் ஏழு தங்கப் பதக்கங்களுடன் மருத்துவராக வெளியே வந்தார்.


தேவதாசிப் பெண் குழந்தை பெற்றாலும் அந்த குழந்தையைப் பேணிக்காக்க தந்தைக்கு அவசியமில்லை என்றிருந்ததாம். தாயை இழந்த ஒரு குழந்தையைத் தானே வளர்க்க முன் வந்தார். பல போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.


சென்னை மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.


சரோஜினி நாயுடு, அன்னிப்பெசண்ட் அம்மையாருடன் நட்பு கொண்டிருந்தார். இந்திய வரலாற்றைத் தெரிந்து கொள்ள தியாசாபிகல் சொசைட்டியின் சொற்பொழிவுகளை கேட்க ஆரம்பித்தார்.


பின்னர் 'இந்தியா' என்ற பத்திரிகைகளில் எழுதலானார். ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதலானார்.


"என்னைச் சமமாக நடத்த வேண்டும், என் விருப்பங்களுக்குத் தடை சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் 1914ம் ஆண்டு தனது 28ம் வயதில் சுந்தர ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். பிறகு தன் பெயருடன் 'ரெட்டி'யை இணைத்துக்கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, ராம்மோகன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.


இவர் ஜெமினி கணேசனுக்கு அத்தையும் ஆவார். ஜெமினிகணேசனின் தந்தை ராமசாமி இவரது சகோதரராவார்.


சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க மகாத்மா காந்தி அழைத்தபோது மறுத்து விட்டார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதிலேயே நேரத்தை செலவிட்டார். இருப்பினும் 1930ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பெண்கள் பங்கேற்பதை ஆதரித்தார்.


மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டபோது தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவித்தார். பெண்கள் தங்களை நான்கு சுவர்களுக்குள் அடைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பெண் விடுதலைக்காகப் போராடினார்.


பெண்கள், குழந்தைகளுக்கென தனியே மருத்துவமனை வேண்டுமெனவும் போராடினார். அதன் விளைவாக சென்னை திருவல்லிக்கேணியில் 'கஸ்தூரிபா' மருத்துவமனை தொடங்கப்பட்டது. அவரது முயற்சிகளின் வெற்றிச் சின்னமாக அது போற்றப்பட்டது.


அவரது சகோதரி புற்று நோயால் பாதிக்கப்பட்ட போது அதன் வலியும் வேதனையும் நன்கு அறிந்திருந்தார்.  


அதற்காக அவர் கடும் முயற்சிகள் எடுத்து நிதி திரட்டி சென்னை அடையாற்றில் புற்று நோய்க்காக ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தினார். தற்போது வரை அம்மருத்துவமனையின் இயக்கமும் வெற்றிகளையும் நாம் அறிவோம்.  


முஸ்லீம் பெண்களுக்கென தனியே தங்கும் விடுதியும், ஹரிஜனப் பெண்களுக்கென உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.


எண்ணற்ற அறச்செயலாற்றிய முத்துலெட்சுமி அம்மையாருக்கு இந்தியக் குடியரசு தலைவரால் 1956 ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டார்.


தமிழுக்காக, தமிழ் இசைச்சங்கம், மொழி வளர்ச்சி, தமிழ் எழுத்தாளர்களின் சம்பள உயர்வு போன்று பலதரப்பட்ட முன்னேற்றத்தில் பங்காற்றினார்.


அவர் எழுதிய My experiences as a Legislator என்ற புத்தகத்தில் அவர் எடுத்த முன்னேற்றங்கள், சமூக சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முத்துலெட்சுமி அம்மையாரின் பெயரிலேயே அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அம்மையாரின் சிலை திறக்கப்பட்டுள்ளது.


எண்ணற்ற ,குறிப்பாக பெண் சமுதாயத்திற்காகப் பல்வேறு சீர்திருத்தங்களையும், போராட்டங்களையும் நடத்தியவரும், முக்கியமான மருத்துவ மனைகளை திறக்க முயன்று வெற்றி கண்டவருமான டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் தனது எண்பத்தோராவது வயதில் ஜூலை 22, 1968ல் இறைவனடி சேர்ந்தார்.  


எண்ணற்ற பெண் சாதனையாளர்களை அடையாளம் கண்டு தெரிந்த எல்லாவற்றையும் நம் சந்ததியினருக்கும் எடுத்துரைப்போமாக. 


 மூன்றாவது பெண்மணியின் சிறப்பை வரும் பதிவில் காணலாம் . நன்றி


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்