உயிருக்கு உயிராய் வளர்த்த உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு கற்று கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் பல பல. சிறுவர்களாக இருக்கும் போது உங்களையே சுற்றி சுற்றி வரும் உங்கள் பிள்ளைகள், வளர்ந்த பிறகு அவர்களுக்கென்று ஒரு உலகத்தை அமைத்து, உங்களை அதற்கு வெளியே நிற்க வைத்து விடுவார்கள்.
அதுவும் திருமணம் ஆன உங்கள் பிள்ளைகள், உங்களுக்கு உலகத்தின் உண்மையை புரிய வைப்பார்கள்.
திருமணம் ஆன பிள்ளைகள் உங்களுக்கு கற்று கொடுக்கும் 4 வாழ்க்கைப்பாடங்கள்
1. அவர்கள் வேறு நீங்கள் வேறு
உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை தவிர வேறு உலகம் இல்லை. அவர்களுக்காக தான் வாழ்வீர்கள். ஆனால், திருமணம் ஆன உங்கள் பிள்ளைகளுக்கு, அவர்கள் குடும்பம் தான் பெரிது. நீங்கள் அவர்கள் பெற்றவர்களாக இருந்த போதிலும், உங்களை கொஞ்சம் தள்ளி தான் வைப்பார்கள். இதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.
2. திருமணத்திற்கு முன் இருந்த நெருக்கம் இருக்காது
பெண்கள் திருமணத்திற்கு பின்னாலும், பெற்றோரோடு இன்னும் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், ஆண்கள் திருமணத்திற்கு பின், பெற்றோரோடு முன்பு இருந்த நெருக்கம் இருக்காது. இதை அப்பா எளிதாக ஏற்று கொள்வதை போல், அம்மாவால் ஏற்று கொள்ள முடிவதில்லை. இதனால் வருவது தான் மாமியார் மருமகள் சண்டைகள்.
3. உங்கள் பிள்ளைகள் நிறைய உங்களிடமிருந்து மறைப்பார்கள்
திருமணத்திற்கு முன்னால், உங்கள் பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையில் நடப்பது எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் திருமணம் ஆன பின், உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையே மூடுமந்திரமாக மாறி விடும். அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி எதுவும் உங்களுக்கு தெரியாது.
4. உங்கள் தேவைகளை தான் பூர்த்தி செய்வார்கள்
உங்கள் பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு, உங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை மட்டும் தான் நிறைவேற்றுவார்கள்.
அவர்களை வளர்ப்பதற்காக நீங்கள் உங்கள் ஆசைகளை எல்லாம் அடக்கி வாழ்ந்ததை மறந்து விடுவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு வசதி வந்தாலும், உங்கள் ஆசைகளை பெரிது படுத்த மாட்டார்கள். உங்களுக்கு வயதாகி விட்டது, வீட்டோடு அடங்கி பேரன் பேத்தியை பார்த்து கொண்டு வீட்டோடு அடங்கி இருக்கணும் என்று எதிர்பார்ப்பார்கள்.
எல்லா பிள்ளைகளும் பெற்றோரை அலட்சிய படுத்துவதில்லை. ஆனால், முக்கால்வாசி பிள்ளைகள் கடனுக்கென்று தான் பெற்றவர்களை பார்த்து கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
-லால்குடி வெ நாராயணன்