தமிழ்நாடு இ பேப்பர்
வற்றாத வளர் நதியாய் வாசக சொந்தங்களின் உள்ளம் பாய்ந்து உவகை ஊட்டும் பேரன்புக்கு ஈடு இணை எதுவும் உண்டோ?
அதிகாலை எழு
ஆகாயம் தொழு
இதயம் துடிக்க விடு
ஈரழுந்த பல் தேய்
உடல் வியர்வை கழி
ஊளைச் சதை ஒழி
எருது போல் உழை
ஏழை போல் உண்
ஐம்புலன் புதுக்கு
ஒழித்து விடு புகை மதுவை
ஓட்டம் போல் நட
ஔடதம் புசி
அஃதாற்றின் எஃகாவாய்...
கவிப்பேரரசுவின்
இந்த நவீன ஆத்திச்
சூடியை நினைவுப் படுத்தும் வகையில்
அதி அதிகாலையில்
தமிழ்நாடு இ பேப்பரின் தரிசனம் கிடைப்பது சிறப்பு..
சிறப்பு...
இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப் பட்டன.
முப்படைத் தலைமை தளபதி .
போர் என்றாலே இரு பக்கமும் சேதாரம் என்பது தானே எதார்த்தம்.
மொத்தத்தில் நிரந்தர அமைதி சூழலுக்காக இயற்கை வழி நடத்திய இயக்கமாகத் தான் இந்தப் போரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அணையப் போகும் நெருப்பு கொஞ்சம் பிரகாசமாக எரியத் தானே செய்யும்.
பாடம் எடுத்து பண்படுத்துவதில் தான் பக்குவமும் பாதுக்காப்பும் சாத்தியப் படும்.
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
போரில்லா உலக அமைதிக்காக எல்லோரும் தினசரி குறைந்த பட்சம் ஒரு நிமிஷம் பிரார்த்தனை புரிவோம். நமது பிரார்த்தனைக்கு பிரபஞ்ச பேராற்றல்
நிச்சயம் நல்லதொரு தீர்வினை வழங்கியே தீரும்.
அரசியல் செய்திகள் அனல் பறத்துகின்றன.
காரிய டெலிவரிக்கு இந்த சூடும் பரபரப்பும்
அவசியத்திலும் அவசியமே!
அதிமுக கூட்டணிக்கு ஆதவ் அர்ஜுனா அழைத்ததாக சீமான் திடுக்கிடும் தகவல்.
பேரம் இன்னும் தகைய வில்லை என்பது புரிகிறது.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சிரித்துச் சொல்லி கடந்து போவது தான் நமக்கு பழக்கப்பட்டுப் போன விஷயமாயிற்றே!
குற்றால அருவிகளில் குளிக்க 7-- வது நாளாக தடை.
சாமி வரம் கொடுத்தும் பூசாரி ஓகே சொல்லாத கதை தான்...
நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளது
ஆச்சரியம் அல்லவே...
காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது... புரிகிறது...
வட்டார செய்திகளுக்கும் வளம் குறையாமல் வாய்ப்பு வழங்கி வரும்
தமிழ்நாடு இ பேப்பரின் தாராளம் திகைக்க வைக்கிறது.
தித்திக்கவும் வைக்கிறது.
ரஞ்சிதப் ப்ரியாவின்
காத்திருக்கும் நேரம்
வாசித்து மகிழ்ந்த நேரம் நல்ல நேரம்.
வாத்சல்யமும் வசீகரமும் இழைந்திருந்தது.
ராதா பாலு வின்
இனிய தோழி ஊஞ்சல்
சிறுகதை சிறப்பு.
செழுமையான மொழி நடையில் கருத்தாழம்
நிறைந்து அள்ளியது.
ஜெ.சிவ சண்முக பிள்ளையின் வரலாறு இன்றைய தலைமுறை
க்கு தேர்ந்த பாடம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சபாஷ்... சபாஷ் என்று
மீண்டும் மீண்டும் பாராட்டி மகிழத் தோன்றுகிறது
தினம் ஒரு தலைவர்கள் பகுதி.
நித்தம் நித்தம் வாசக சொந்தங்களை
வளமான சிந்தனைகளால் செழிக்க செய்யும்
தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் அற்புத சேவை என்றென்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்