tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-01.06.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-01.06.25


பாகிஸ்தானுடனான யுத்தத்தில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை இப்பொழுது முப்படைகளின் தலைமை தளபதி ஒப்புக் கொண்டிருக்கிறார்.


போர் என்று வரும்போது இரண்டு தரப்பிலும் சேதங்கள் ஏற்படுவது இயற்கையே ! 


மதுரையில் முதலமைச்சர் 22 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தியிருக்கிறார். சரியான கூட்டம் கூடி இருக்கிறது. இந்த கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறும் என்பது நிச்சயம் இல்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை வேடிக்கை பார்க்க பல கட்சிகளை சேர்ந்தவர்களும் வருவார்கள். 


பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் ரோடு ஷோ நடத்துகிறார். அத்தனை இடங்களிலும் பாஜக ஜெயிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


" நேர்மறை எதிர்மறை " சிறுகதை அடுத்தவர் குணத்தை நாம் அலசிப் பார்க்கக் கூடாது. அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் பார்க்க வேண்டும்..


 எந்த ஒரு மனிதனும் 100 சதவீதம் நல்லவனாக இருக்க முடியாது.  ஒவ்வொருவரும் தான் நல்லவன் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பற்றி அடுத்தவரிடம் கேட்டால் தான் நம்முடைய மறுபக்கம் புரிய வரும்.


எந்த காரியத்திலும் எதிர்மறையை பார்க்காமல் அதில் பொதிந்திருக்கும் நேர்மறையை பார்க்க வேண்டும் என்பது போன்ற மிக அருமையான வாழ்வியல் நடைமுறைகளை விளக்கியது சிறுகதை.


 பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன.

இது சமுதாய சீர்திருத்தத்தில் முதல் படியாகும். இதற்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த சட்டத்தை பாகிஸ்தானில் இருக்கும் மற்ற மாநிலங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டு முறையில்

ஆட்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று பாமகவின் அன்புமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


இப்போதெல்லாம் அரசாங்கம் நிரந்தர பணியிடங்களில் ஆட்களை நியமிப்பதற்கு தயக்கம் காட்டுகிறது. நிரந்தர பணியிடங்களில் ஆட்களை நியமித்தால் ஆகும் மாதாந்திர சம்பளத்தில் நான்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கலாம் என்று லாப கணக்கு பார்க்கிறது. 


ஒப்பந்த பணியாளர்களுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம், கிராஜுட்டி போன்றவை தர வேண்டிய அவசியம் இல்லை என்பதே இதற்கு காரணம்.


தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் பதற்றம் தேவையில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறுகிறார்.

பதற்றம் தேவையில்லை என்றாலும் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு முக்கிய தேவை ஆகும்.


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்