tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-31.05.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-31.05.25


வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் நகை கடன்களுக்கு புதிய விதிகளை வரையறை செய்த ரிசர்வ் வங்கியின் செயலை பெரும்பாலானோர் கண்டித்த நிலையில் இரண்டு லட்சம் ரூபாய் வரை நகைக் கடன் பெறுபவர்களுக்கு அந்த விதிகளை தளர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. 


நடைமுறைக்கு ஒத்து வராத அந்த விதிகளை திரும்பப் பெற வேண்டுமே தவிர அமல்படுத்துவதை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை தள்ளிப் போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.


கட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் டாக்டர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் நடைபெறும் போராட்டத்தில் அன்புமணியின் கைதான் ஒங்கி இருப்பதாக தோன்றுகிறது.


 பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அன்புமணிக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். 


இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 ஆக சரிந்திருக்கிறது. ஜிடிபி என்றால் என்ன என்று தெரியாத பாமரர்களுக்கு ஒன்றுமே புரியப் போவதில்லை. ஆட்சியாளர்களை கேட்டால் உலகின் நான்காவது பொருளாதார வல்லரசாக இந்தியா விளங்குவதாக திரும்பத் திரும்ப சொல்வார்கள்.


கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பிஏ ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. 


அந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுமே படுதோல்வியை சந்தித்ததால் இப்போது அதிமுகவுக்கு இருப்பது வெறும் இரண்டே இரண்டு ராஜ்யசபா சீட்டுகள் தான்.

சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்று கூறி அதிலிருந்து ஒரு இடத்தை கேட்கிறது தேமுதிக. 


ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டியது அதிமுகவின் தார்மிக பொறுப்பு என்றாலும் இருப்பது வெறும் இரண்டே இடங்கள் என்பதாலும்,  அதிமுக உள்ளேயே அதற்கு போட்டி ஏராளமாக இருக்கிறது என்பதாலும்  தேமுதிக தங்களுக்கு உரிய ஒதுக்கீட்டை வழங்கச் சொல்லி வலியுறுத்துவதும் தார்மிக தவறு ஆகும்.


அதிமுக ஒரு எம்பி பதவியை தராவிட்டால் தேமுதிக அடுத்த கட்ட முடிவை எடுக்கும் என்று பிரேமலதா பேசியிருக்கிறார். கிடைக்காததை எண்ணி அழுவார்கள் என்று நினைக்கிறேன். அதைத் தவிர அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் ?


இப்படி சுயபலம் இல்லாமல் அடுத்தவரின் தயவில் தங்களது ஆட்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப விரும்பும் கட்சிகளின் செயல் 

குறுக்கு வழிகளில் பதவி சுகத்தை அனுபவிக்கும் செயல்களில் ஒன்றாகும் .


" ஏமாற்றம் " சிறுகதை புறத்தோற்றத்தைப் பார்த்து உடனடியாக காதலில் விழும் பெண்களுக்கு சரியான பாடமாக விளங்கியது.



-வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்.