சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி, கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்த நிலையில், செவ்வாழை, நேந்திரன் உள்பட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேதத்தை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கடந்த ஒரு வாரமாக, அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், கோடை மழையால் வெப்பம் தணிவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி மற்றும் கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. எடப்பாடியில் மட்டும் 50.2 மிமீ., மழை பதிவானது.
எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. எடப்பாடி நகரப் பகுதியில், தாழ்வான இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சாலை, தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் குளம்போல தேங்கியது. இதனிடையே, கனமழை காரணமாக, எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையத்தில், செங்கோடன் என்பவரின் விளை நிலத்தில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராகி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமானது.
இதேபோல், எடப்பாடியை அடுத்த தாராபுரம் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த வையாபுரி என்பவரின் தோட்டத்திலும் 1500-க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து சேதமாகின. கொங்கணாபுரத்தை அடுத்த கோரானம்பட்டியில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பூவன் வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
இதனிடையே, மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே கத்திரிப்பட்டியில் சின்னபையன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் ஆயிரம் நேந்திரம் வாழை மரங்கள், சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் முறிந்து சேதமாகின. சூறாவளிக் காற்றினால் பல இடங்களில், வாழை உள்பட விளை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அரசின் பொது நிவாரண நிதியில் இருந்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.