பன்முகம் இதழ் மூலம்
யார் இந்த அஜித் தோவல் ? என அறிந்தேன்.
அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் இருந்தே, ஆற்றிய ராணுவ சேவைகளை படித்து, மலைத்தேன்.
வெ.நாராயணன் எழுதிய என்னைக்காச்சும் கணக்கு கேட்டிருக்கோமா? ஒரு தோசை ₹70 என்றதும் மாவு பாக்கெட்டே ₹35 என சப்ளையரிடம் வாக்குவாதம் செய்ததும், ஒரு காலத்தில் அதாவது என் பதின்ம வயதில் இதே தோசையை வெறும் 70 பைசாவிற்கு சாப்பிட்டதும் நினைவிற்கு வந்தது.
வானொலியும் கண்ணதாசனும் - ஒரு பேராசிரியை கண்ணதாசன் எந்தெந்த இலக்கியங்களில் இருந்து வரிகளை எடுத்து கையாண்டிருக்கிறார் எனச் சொல்ல, அவர் பாராட்டு மழையில் நனைய , கவியரசரே தொலைபேசி இணைப்பில் வந்து, அது கடைக்கோடி மக்களையும் சென்றடையத் தான் எடுத்த முயற்சி என விளக்கியது அருமை.
இதோ அதற்கு ஒரு சான்று;
"நதியின் பிழையன்று நறும்புனலின்மை" - இந்தக் கம்பராமாயண வரிகளை, " நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை, விதி செய்த குற்றமன்றி வேறு ஏதம்மா? என "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..." பாடலின் இடையே மிக எளிமையாகப் போட்டிருப்பார் கவியரசர்.
'தியாகம்' படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் வரிகள் எல்லாமே, மனதில் பதியும் வண்ணம் இருக்கும்.
*ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சமில்லை....
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் ...இல்லை"
"தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"
மனிதனம்மா மயங்குகிறேன்....
ஸ்ரீகாந்த்
திருச்சி