news Breaking News
clock

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவு  அளிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

சென்னை, ஆக. 18–


துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:


தமிழகத்திலுள்ள இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போதுதுணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.


ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும். இதற்கு இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும். ஆகவே, கட்சி வித்தியாசங்களைத்தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News