என்னாங்க! சும்மாதான உட்கார்ந்திருக்கீங்க..
மழை வர மாதிரி இருக்கு! மாடியில காயிற துணியெல்லாம் கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க....!
அப்புறம் மளிகை சாமான்லாம் கொஞ்சம் வாங்கனும்! நான் சொல்றதை அப்படியே எழுதிக்குங்க....
மளிகை கடைக்கு போற வழியில, டைலர் கடையில என் சட்டைத்துணியை தைக்க கொடுத்துடுங்க...
காய்கறி கடைக்கு சாயங்காலமா போயி காய்கறியை வாங்குனாத்தான் நாளைக்கு சமைக்க முடியும்!
சரி... சரி... எல்லா வேலைகளையும் முடிச்சிடலாம்... கொஞ்சம் சும்மா இருக்கீயா.... என்றான்; சுந்தர் தனது மனைவி ஆண்டாளிடம்... !
இப்படித்தான் தனது மனைவி தன்னிடம் இருபத்தி நான்கு மணி நேரமும் நச நசன்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்கா... இதை நிறுத்தறதுக்குத்தான் உங்கிட்ட ஒரு வழியே கேட்டேன்... நீ என்னடான்னா ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற... என்று தனது உயிர் தோழன் ராகவனிடம் யோசனை கேட்டான் சுந்தர்...
நானும் யோசிச்சு, யோசிச்சு பார்க்குறேன்... சரியான யோசனை ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது! வேணும்னா, இப்படி பண்ணிப் பார்க்கலாம்... உன் மனைவி என்னா போன் வச்சிருக்காங்க?
என்னா போனுன்னு கேட்டா எப்படி?
என்னா கம்பெனி போனுன்னு கேட்கறியா?
பட்டன் செல்லா... டச் செல்லா...!
ஓ.... அதை கேட்கறியா? சாதாரண பட்டன் செல்தான் வச்சிருக்காப்புல.... !
அப்படின்னா... நீ செல் போனை மாத்திக் கொடு... அப்புறம் பாரு! உன் மனைவி உன் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாப்புல....!
என்னாப்பா... இப்படி சொல்ற... செல் போனுக்கும் இதுக்கும் என்னா சம்பந்தம் இருக்கு?
நான் சொன்னதை முதல்ல செஞ்சு பாரு!
அப்புறமா வந்து என்னை பாரு....
நண்பன் ராகவனின் யோசனையை தலைமேல் ஏற்றுக் கொண்ட சுந்தர், தன் மனைவி ஆண்டாளுக்கு,ஆண்ட்ராய்டு போன் ஒன்றை புதிதாகவே வாங்கி கொடுத்து விட்டான்....
ஒரு மாதம் கழிந்த நிலையில், எதெச்சையாக கடைத்தெருவில் நண்பர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
என்னப்பா...உன் மனைவியோட நச்சரிப்பு குறைஞ்சிருக்குமே என்றான் ராகவன்...
அதை ஏன் கேட்குற...
பிள்ளையார் பிடிக்க,குரங்கா மாறின கதையா என் நிலைமை ஆயிடுச்சு...என்றான் சுந்தர்.
ஏன்..என்னா ஆனுச்சு? என்று அதிர்ச்சியோடு கேட்டான் ராகவன்..
அதாம்பா...நீ சொன்ன யோசனைப்படி என் மனைவிக்கு புதுசா டச் போன் ஒன்னு வாங்கி கொடுத்தன்..இப்ப
இருபத்து நான்கு மணி நேரமும் என் மனைவி வாட்ஸ்அப், யூடியூப் பார்க்குறதுலேயே காலத்தை ஓட்டிக் கிட்டு இருக்கா...!
அதனால எனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்குறதே பெரும் திண்டாட்டமா இருக்கு; என்று அழுவாத குறையா நண்பன் ராகவனிடம் சுந்தர் புலம்பிக் கொண்டிருந்தான்...
++++++++++++++++++
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.