அப்பா! எனக்கொரு சந்தேகம்!
ஏன் அப்பா, வருடத்தில் மற்ற மாதங்கள் 30 அல்லது 31 நாட்கள் கொண்டிருக்க. பிப்ரவரி மாதம் மட்டும் ஏன் 28 அல்லது 29 நாட்களாக உள்ளது?
நல்ல கேள்வி. முதலில் நீ நாள்காட்டி பிறந்த கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரோமானியர்கள், விவசாயத்திற்கான பருவ நிலை மாற்றம் பற்றி அறிய நாட்காட்டியை உருவாக்கினார்கள். முதலில் உருவாக்கிய நாட்காட்டியில் 304 நாட்கள் மட்டும் தான் இருந்தது. இது பத்து மாதங்களாக, ஆறு மாதங்கள் முப்பது நாட்களாகவும், மீதி நான்கு மாதங்கள் முப்பத்து ஒன்று நாட்களாகவும் வடிவமைக்கப்பட்டது.
ஒன்றிலிருந்து பத்து வரையான ரோமானிய எண்களின் பெயர்கள் மாதங்களுக்கு சூட்டப்பட்டன. முதல் மாதம்-மார்ஷியஸ், இரண்டு-ஏப்ரலியஸ், மூன்று-மையஸ், நான்கு-ஜூனியஸ், ஐந்து-க்வின்டிலிஸ், ஆறு-செக்ஸிடிலிஸ், ஏழு-செப்டம்பர், எட்டு-அக்டோபர், ஒன்பது-நவம்பர், பத்தாவது மாதம்-டிசம்பர்.
பூமி சுழற்சிக்கு 365.25 நாட்கள் ஆகிறது. ஆனால் நாட்காட்டியில் 304 நாட்கள் மட்டுமே. ஆகவே நுமா பாம்ப்லியஸ் என்ற அரசர் ஜனவரி, பிப்ரவரி என்ற இரு மாதங்களை முறையே பதினொன்றாவது, பன்னிரெண்டாவது மாதங்களாகச் சேர்த்து 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியாக மாற்றினார்.
இப்போதும் பூமி சுற்றுகைக்கும், நாட்காட்டிக்கும் பத்து நாட்கள் வித்தியாசம் இருந்தன. கிறிஸ்து பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னால் ஜூலியஸ் சீசர் என்ற ரோம அரசர் இந்த 10 நாட்களைச் சேர்த்து புதிய நாட்காட்டியை வடிவமைத்தார். அதன்படி ஜனவரி 31 நாட்கள், பிப்ரவரி 30 நாட்களாகியது.
ரோமப் பேரரசரர் ஜூலியஸ் சீசர் ஐந்தாவது மாதத்தில் பிறந்தவர். ஆகவே ஐந்தாவது மாதமான க்வின்டிலிஸ் என்ற பெயரை ஜூலை என்று மாற்றினார். தான் பிறந்த மாதத்தில் மற்ற மாதங்களை விட குறைவான நாட்கள் இருக்கக் கூடாது என்று, பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் எடுத்து ஜூலையில் சேர்த்தார். ஆகவே, ஜூலை 31 நாட்கள் ஆக, பிப்ரவரி 29 நாட்களாகக் குறைந்தது.
ஜூலியஸ் சீசருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் செக்ஸிலிடிஸ் மாதத்தில் பிறந்தவர். அதனால் ஆறாவது மாதத்தின் பெயரை ஆகஸ்ட் என்று நாமகரணம் செய்தார். நான் என்ன ஜூலியஸூக்கு சளைத்தவனா என்று பிப்ரவரியிலிருந்து ஒரு நாளைப் பிடுங்கி ஆகஸ்ட் மாதத்தில் சேர்த்தார். இதனால் ஆகஸ்ட் 31 நாள் ஆக மாற பிப்ரவரி, 28 நாளாக குறைந்தது.
சில வருடங்களுக்குப் பிறகு ஜனவரி முதல் மாதமாகவும், பிப்ரவரி இரண்டாவது மாதமாகவும் மாறியது. டிசம்பர் வருடத்தின்ட கடைசி மாதமாகியது.
நாம் இப்போது பயன்படுத்தும் நாட்காட்டிக்கு கிரிகோரியன் என்று பெயர். 1582 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கே.என்.சுவாமிநாதன், சென்னை
03-02-2026
K.N.Swaminathan
Chennai - 600041