சென்னை: எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று பிரேசில் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் 7-5, 7-2, 7-2 என்ற செட் கணக்கில் பிரேசிலின் பெட்ரோ மொமெட்டோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அபய் சிங் 7-3, 7-1, 7-1 என்ற செட் கணக்கில் டியாகோ கோபியை தோற்கடித்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் 7-4, 7-0, 7-2 என்ற செட் கணக்கில் லாரா சூசா பெசெரா டா சில்வாவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, பிரேசிலின் புருனா மார்ச்செசி பெட்ரிலோவை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் காயம் காரணமாக புருனா மார்ச்செசி பெட்ரிலோ விலகினார். இதனால் ஜோஷ்னா 7-0, 7-0, 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி சுவிட்சர்லாந்தை 4-0 என வென்றிருந்தது.
இந்த 2 வெற்றிகளின் மூலம் இந்திய அணி 8 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் சுவிட்சர்லாந்து அணி 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த ஹாங் காங், தென் ஆப்பிரிக்கா அணிகளும், ‘சி’ பிரிவில் மலேசியா, ஆஸ்திரேலியா அணிகளும், ‘டி’ பிரிவில் நடப்பு சாம்பியனான எகிப்து, ஜப்பான் அணிகளும் கால் இறுதி சுற்றில் கால் பதித்தன.
கால் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெறுகிறது. மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ஹாங் காங் - சுவிட்சர்லாந்து, ஜப்பான் - மலேசியா, எகிப்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?