4 ஆண்டுகளில் தமிழகம் மகத்தான வளர்ச்சி: புதிய ஆலையை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Dec 07 2025
20
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேசன் மற்றும் இந்தியாவின் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், ரூ.1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன் கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
இந்த தொழிற்சாலையை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழிற்சாலையை பார்வையிட்டார். அதன்பின் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜனவரியில், இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் போட்டு, 17 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதில், 80 சதவீதம் திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.
இந்த வேகமும், வெளிப்படைத் தன்மையும் தான் 4 ஆண்டுகளில் எலெக்ட்ரானிக்ஸ், ஜிசிசி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைகளில் மகத்தான வளர்ச்சியை தந்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் துறையில் 14.65 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் நாட்டிலேயே முதல் மாநிலமாக உள்ளோம்.
ஒட்டுமொத்த இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நமது பங்கு 41 சதவீதமாகும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த துறையில் 9 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளோம்.
இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, ரூ.440 கோடி முதலீட்டில், மத்திய அரசுடன் சேர்ந்து ‘மின்னணு தயாரிப்பு தொகுப்பு’ மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில், சூரிய ஒளி சார்ந்த கதிரியக்க சோதனை மையம் - மின்சாதனங்கள் சோதனை மையம் – மின்னணு சான்றிதழ் ஆய்வகம் – பிசிபி வடிவமைப்பு, விரைவான மாதிரி தயாரிப்பு மையம் – திறன் மேம்பாட்டு மையம் – தொழிலாளர் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநர் பு.அலர்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?