tamilnadu epaper

அழகு எது

அழகு  எது

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

அழகென்றல் உடலழகா  

இல்லை இல்லை

அழுக்காறே இல்லாத  

அகமே அழகு

அழகென்றால் ஒப்பனையால் 

 வருவ தன்று

அன்பாலே நிறைந்துள்ள  

அகமே அழகு !

அழகென்றால் அணிகலன்கள் 

 தருவ தன்று

அம்மாவைப் போல்குழந்தை 

 அகமே அழகு

அழகென்றால் மினுமினுக்கும்  

வெண்தோல் அன்று

அழுக்கில்லா பசும்பாலின்  

அகமே அழகு !

துன்பத்தைத் தாராமல்  

துயர்து டைத்துத்

துணையாக அணைக்கின்ற  

கையே அழகு

இன்பத்தைக் காண்பதற்கே 

 இருள கற்றி

இடர்கடக்க வழிகாட்டும்  

காலே அழகு !

புன்மைகளைச் செய்கின்ற 

 புளிக்கும் காயாய்ப்

புகல்கின்ற கசப்பான  

சொல்லாய் இன்றி

இன்சுவையைத் தருகின்ற  

கனிகள் போன்று

இயம்புகின்ற இனிமையான 

 சொல்லே அழகு !

அன்றலர்ந்த மலரழகு  

ஆகா யத்தை

அலங்கரிக்கும் வட்டநிலா  

முகில்கள் அழகு

நன்றாகச் செழித்திருக்கும்  

காடு வெற்பு

நதியாகும் மலையருவி  

இயற்கை அழகு !

வன்முறைகள் இல்லாமல் 

 உலகம் தன்னை

வளமுடனே வாழவைக்கும் 

 அமைதி அழகு

இன்றிவைகள் அழகெனினும் 

 மனித நேய

இதயமொன்றே பேரழகு 

 பெறுவோம் நாமே !