tamilnadu epaper

சர்ச்சையை கிளப்பிய ஆடை கட்டுப்பாடு- விற்பனைக்கு வந்த “நீட்” தேர்வு டாப்ஸ்

சர்ச்சையை கிளப்பிய ஆடை கட்டுப்பாடு- விற்பனைக்கு வந்த “நீட்” தேர்வு டாப்ஸ்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.


இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.


2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.


இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


குறிப்பாக, மாணவிகளில் துப்பட்டாவை கழற்ற சொல்வது முதல், மூக்குத்தி, காதில் தோடு என மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.


திருப்பூரில் ஒரு மாணவியில் உடையில் நிறைய பொத்தான்கள் இருந்ததாக கூறி அதை அறுத்து எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


நாம் தமிழர் சட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.


அப்போது அவர்,” தமிழ்நாட்டு மாணவர்களை மட்டும் குறிவைத்து பாகுபாடு காட்டப்படுகிறது. மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.


நீட் தேர்வு எழுதும் மாணவிகள் அணிந்து வரும் அடைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல்வேறு ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது.


தேசிய தேர்வுகள் முகமை எதிர்பார்க்கும் வகையில், பொத்தன்கள் இல்லாத, எந்த வித டிசைன்களும் இல்லாத பிளெயின் நிறத்தில் சுடிதார் டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளது..