tamilnadu epaper

நாளை என்ன நடக்கும்?

நாளை என்ன நடக்கும்?

 கைனடிக் ஹோண்டாவை சேகர் காந்தி சிலை அருகே  நிறுத்தி விட, வினோதினியும்  இறங்கினாள். நாளை அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. " மங்கலம்" திருமண தகவல் மையத்தின் மூலம்  இரு வீட்டாரும் ஜாதக பரிமாற்றம்  செய்து , முறையாய்  குடும்ப பெரியோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம்.சேகர் , வினோதினி வீடு சென்று, அவள் பெற்றோரின் அனுமதியுடன் அவளை கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான்.
                  இளம் சிவப்பு நிற ஷிபான் சேலை; மிதமான அலங்காரத்தில் அமைதியான கவர்ச்சி இருந்தது.இருவரும் அலையைப் பார்த்த வண்ணம்  சிறிது நேரம். அமர்ந்திருந்தார்கள். வினோதினி எழுந்து    அலையில் காலை நனைத்த வண்ணம், "சேகர்! உங்களுக்கு அலையில் கால் நனைக்க பிடிக்காதா; இல்லை, பயமா?" என்று கேட்டாள்.
                    சேகர் புன்னகையுடன் " பயம்  ஒன்றும் இல்லை" என்றவாறே எழுந்து அவள் அருகில் சென்று நிற்க,ஒரு  எளிதான சூழல் உருவாயிற்று. " ஹோல்ட் மை ஹேண்ட், இஃப் யூ ஆர் ஸ்கேர்ட்" என்றாள் வினோதினி. சேகர் அவள், கண்களை பரவசத்துடன் பார்த்தபடி, அவள் கரத்தை அன்புடன் பற்றினான்.  வினோதினி புன்னகையுடன் தன் கண்களை  சிமிட்டினாள்.
                  இருவரும் , முதலில் பொதுவான விஷயங்களையும் , பிறகு தம்மைப் பற்றியும்   பேசிக்கொண்டனர்.  நாளை நடக்க இருக்கும் நிச்சியதார்த்தம் பற்றி பேசும்போது  இருவரும் ஒரு விதமான மனவெழுச்சியில் இருந்தனர்.
                கடற்கரையில் இருள் கவியத் தொடங்கியதால்; "சட் " என இருவரும்  எழுந்த நிலையில், சேகர் ஒரு பக்கமாய் சரிந்தான். வினோதினி திடுக்கிட்டு அவன் கையைப் பற்றி உட்கார  வைக்க, அவன் மீண்டும் கீழே சரிந்தான். "  என்ன சேகர்?  என்ன செய்கிறது" என்று கேட்க அவன் வாய் குளறிப் பேசுவது, அவளுக்கு புரியவில்லை. சிறிது நேரம்  கடற்கரை மணலில்  படுத்திருந்தவன் அரை மணி நேரம்  கழித்து கண் விழித்து தனக்கு மிகவும் தலைவலியாக  இருப்பதாகச் சொன்னான்.
                     வினோதினி அவன்  கையைப்பிடித்து  அழைத்து வந்து, கைனடிக் ஹோண்டாவின் சாவியை அவனது சட்டைப் பையிலிருந்து  எடுத்து , " பில்லியனில் உட்கார். நான் வண்டியை ஓட்டுகிறேன்" என்றாள்.
                    வண்டி நேராக அப்பல்லோ  மருத்துவமனைக்கு சென்றது.அவனுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. இருமுறை இருவர் வீட்டிலிருந்து வந்த அலைபேசி அழைப்பை அவள் துண்டித்து விட்டாள்.இன்னமும் தலைவலியில் துடித்துக் கொண்டிருந்த சேகரை பார்க்கும்போது வினோதினிக்கு திகிலாகவும், பாவமாகவும் இருந்தது. ஒருவாறாக சோதனை யாவும் முடிந்து நரம்பியல் மருத்துவர் கல்யாண ராமன் முன்பு அமர்ந்திருந்தனர். மருத்துவர்  இவர்களைப் பற்றி  விசாரித்து விட்டு சேகரிடம் பேச  ஆரம்பித்தார்.
                இது போன்று தலைவலி அவனுக்கு வருடத்தில் இரண்டு மூன்று முறை வருவதாகவும் அவன் தாயாருக்கும்,  அக்காவுக்கும் வருவதுண்டு என்பதாகவும் சொன்னான். தன் சித்தியின் குழந்தைகளுக்கும் இந்த தொந்தரவு இருப்பதாகச் சொன்னான். 
                 இதை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த வினோதினிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இது பற்றி ஏன் அவர்கள் வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை என்று கேள்வி மனதில் முட்டி நின்றது.
                  "இதற்கு நீங்கள் என்றாவது மருத்துவரிடம் போயிருக்கிறீர்களா" என்று கேட்டார்; கல்யாணராமன்
" இல்லை!டாக்டர்;  மறுநாளே தலைவலியோ மற்ற எந்த தொந்தரவும் இருக்காது என்பதினாலும், குடும்பத்தில்   இதுபோன்ற தொந்தரவு  இருப்பதை  அறிந்ததினாலும் நாங்கள் எவரும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொண்டதில்லை." என்றான்
                     மருத்துவர், " ஆம். இது  மைக்ரேனில் ஒரு வகை. வெகு கடுமையான மைக்ரேனின் வெளிப்பாடு. இது ஒரு பரம்பரை வியாதி. இதற்கென்று  குறிப்பிட்ட மருத்துவம் ஏதும்  இல்லை. தலைவலி இருக்கும் சமயம் முழு ஓய்வு மட்டும் தேவை‌.  முறையான தேகப்பயிற்சி சரியான நேரத்தில் உணவு என்பதெல்லாம்
இதை ஒரளவு கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவலாம். மற்றபடி உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை.  நடைமுறை வாழ்க்கைக்கு எந்த தடங்கலும் இடையூறும் இல்லை. நாளை  திருமண நிச்சயதார்த்தம் நிகழ உள்ள நிலையில் அவர்களுக்கும் உங்கள்  தேக ஆரோக்ய  நிலை பற்றி தெரிந்ததும் நன்மையே. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் " என்று கூறி முடித்தார்
                   வினோதினி மும் சேகரும் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்தனர்.  "சாரி! வினோதினி! உன்னை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி விட்டேன்" என்றான் சேகர்
                   " சேகர்!  அது ஒரு பொருட்டு அல்ல. இது மாதிரி உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது , என்று ஏன் முன்பே என் பெற்றோரிடம் தெரியப்படுத்த வில்லை?எனக்கு ஏதும் பிரச்சனை இருந்து நாங்கள் உங்களுக்கு தெரிவிக்காமல் இருந்திருந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்? யோசியுங்கள்" என்று வினோதினி கூற,  அதற்கு சேகரால் விளக்கம் கொடுக்க இயலவில்லை. மருத்துவரிடம் கொடுத்த காரணத்தை நாளை மனைவியாகும் பெண்ணிடம் சொல்ல இயலவில்லை. குற்ற உணர்ச்சியிலும் வருத்தத்திலும் தலை குனிந்தான்.
                  " சரி! நேரமாகிறது ! வீட்டிற்கு செல்வோம்; என்று  வண்டியை எடுக்க; சேகர் பில்லியனில் அமர்ந்தான். வீடு வந்ததும் அவனிடம் சாவியைக் கொடுத்து விட்டு;"நன்கு ஓய்வெடுங்கள்" என்று கூறி; அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி கையசைத்து விடைபெற்றாள்.
                  சேகரின் மனதில் சூறாவளி சுழன்று அடித்தது. "தன்னைப்பற்றி அவள் என்ன நினைத்திருக்கிறாள்; நாளை நிச்சியதார்த்தம் நடை பெறுமா; திருமண ஏற்பாட்டை  மேலே எடுத்துப் போகலாமா; வேண்டாமா? " என்ற குழப்பத்துடன் அவன் தன் வீட்டு வாசலின் அழைப்பு மணியை அழுத்தினான்.
சசிகலா விஸ்வநாதன்