யாக்கை நிலையாமை யாவரும் அறிவர்
வேட்கை குறையாமை வேதனை அளித்திடும் !!
வேதனை நிலைத்திட மனத்தினை அழிக்கும்
பாதகம் கூடிட அதுஉயிரை மாய்த்திடும் !!
கல்வி அறிவு பெற்றது அழியாதது
கல்வி அறிவு மூடத்தை அழிப்பது !!
கல்வியால் வந்திடும் செல்வம் அழிந்திடும்
செல்வம் நிலையாத் தன்மை உடைத்து !!
செய்யும் நற்செயல் புண்ணியம் அழியாதது
செய்யும் பாவச்செயல் தொடர்ந்தே அழியாதது !!
அளவிலாச் செல்வம் உயிரையும் அழித்திடும்
உளமார முதியோர் பேணல் அழியாப்புண்ணியம் !!
இளமை உருவம் காலம் அழித்திடும்
வளமான அழகினைக் காலமே அழித்திடும் !!
நற்குணப் பண்புகள் அழியா திருப்பது
துர்க்குணம் கொண்டோரை அதுவே அழித்திடும் !!
-சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி-6.