எண்ணங்களை எழுத்தாக்கி
வண்ணங்கள் பல தீட்டி
கதைகளாக கவிதைகளாக கட்டுரைகளாக
வடிக்கிறான் எழுத்தாளன்!
இவனும் பிரும்மன்தான்!
சரஸ்வதி வந்தபின் லட்சுமி வருவதில்லை
லட்சுமியும் இல்லாமல்
சரஸ்வதியையும் வெறுக்காமல்
இறுக்கமாகிறான் எழுத்தாளன்
எத்துனை திறமை இருந்தாலும் பெரிய படைப்பு படைத்தாலும் இனம் கண்டு கொள்ள யாருமில்லை. குடத்திலிட்ட விளக்கானான் எழுத்தாளன்
எழுதிய கைகள் நிற்கவில்லை. எண்ண ஊற்றுக்கு குறைவில்லை. ஏட்டுச் சுரைக்காய் ஆனது ஏங்கிப் போகிறான் எழுத்தாளன்
நூலகம் நுழைந்தாலும் வாசகர் கை போனாலும் வாசித்தால் மட்டுமே வெளிவரும் திறமை! நடக்குமா என்று காத்திருக்கிறான் எழுத்தாளன்
நம்பிக்கை குறையவில்லை நட்டமும் லாபமும் நாளுமில்லை. மனதிற்கு நிம்மதி, வாழ்க்கைக்கு ஒன்றுமிலை என்கிறான் எழுத்தாளன்
வாசிப்பை நேசிக்கும் வாசகர் வேண்டும்
விலையில்லா கற்பனையை விலைகொடுத்து வாங்குவார் வேண்டும்
வசந்தம் தேடி வாசலில் நிற்கிறான் எழுத்தாளன்
எழுதிய கைகள் நிற்கவில்லை
எதிர்பார்ப்பும் ஏக்கமும் தீரவில்லை
எழுத்துக்களை நேசிப்பதால் எழுதிக் கொண்டே இருக்கிறான் எழுத்தாளன்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்