கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களை கூண்டில் வைத்து காலிஸ்தான் குழுவினர் பேரணியாகச் சென்றுள்ளனர்.
மேலும், கனடாவில் உள்ள ஹிந்துக்களை நாடுகடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பியதால் அந்நாட்டில் வாழும் ஹிந்துக்கள் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
டொராண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா என்ற பகுதியில் ஹிந்துக்களுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக காலிஸ்தான் குழுவினர்ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பான விடியோவை பகிர்ந்த கனடா ஹிந்து வர்த்தக சபை அமைப்பினர் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
”கனடாவில் 800,000 ஹிந்துக்களும் 18.6 லட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். தற்போது ஹிந்துக்களை குறிவைத்து பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான போராட்டத்துக்கு அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று ஹிந்து வர்த்தக சபை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த பேரணியை கனடாவில் தாக்குதல்களை நடத்தும் ’கே-கேங்’ என்ற காலிஸ்தான் அமைப்பினர் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா பத்திரிகையாளர் டேனியல் போர்ட்மேன் கூறியதாவது:
”எங்கள் தெருக்களில் வன்முறையில் ஈடுபடும் ஜிஹாதிகள், காணும் யூதர்களை எல்லாம் அச்சுறுத்தும் வகையில், சமூகக் கட்டமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால், காலிஸ்தான் குழுக்கள் இயங்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அளிக்கப்படுகிறது. காலிஸ்தானியர்களை கையாள்வதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிலிருந்து மார்க் கார்னி மாறுபட்டவராக இருப்பாரா?” என்று கேள்வி கனஎழுப்பியுள்ளார்.
கனடாவில் ஹிந்துக்களுக்கு எதிராக காலிஸ்தான் குழுவினரின் தொடர் போராட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.
காலிஸ்தான் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வந்த லிபரல் கட்சித் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின், கட்சிக்குள் ஆதரவை இழந்ததால் பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, லிபரல் கட்சித் தலைவராகவும் கனடாவின் பிரதமராகவும் பொறுப்பேற்ற மார்க் கார்னி, நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை சந்தித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், மார்க் கார்னி பிரதமரானார்.
இந்த நிலையில், மார்க் கார்னி மீண்டும் பிரதமராகி ஒரு வாரத்துக்குள் ஹிந்துக்களுக்கு எதிராக காலிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களின் உருவ பொம்மைகளை கைதிகளைப் போன்று சித்தரித்து கூண்டுக்குள் வைத்து பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.