பாபநாசம், மே 30-
அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி, காவிரி ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. பாலம் கட்டி ஒரு வருடம் கடந்த நிலையில், இன்றளவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பாலம் கட்டி முடிக்கவே 3, 4 வருடம் ஆன நிலையில், பாலத்தை இணைக்கின்ற சாலைப் பணி இன்னும் ஏன் முடியாமல் உள்ளது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. குடமுருட்டி ஆற்றின் மீதான பழைய பாலம், ஐம்பது ஆண்டுகளை கடந்த நிலையில், பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலம் பழுது என்பதோடு, பாலம் குறுகியது என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி திறக்க உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகும். மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனம் செலுத்தி பால பணியை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று புதிதாக கட்டப்பட்ட காவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாத நிலையில், சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்பிருப்பதால் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.