tamilnadu epaper

புதிய பயண அட்டை வழங்கப்படும்வரை மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி

புதிய பயண அட்டை வழங்கப்படும்வரை மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி

சென்னை:

புதிய இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துறை செயலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ-க்கள் திறக்கப்பட உள்ளன.


இதையொட்டி, 2025-26 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்கள் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரியிலேயே இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


அதற்கான காலஅளவை கருத்தில்கொண்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25 கல்வி ஆண்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பயண அட்டை மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தங்கள் இருப்பிடத்திலிருந்து தாங்கள் படிக்கும் பள்ளி வரை சென்று வரலாம்.


அதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவ, மாணவிகள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உரிய நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றிச்செல்லவும், மாலையில் இறக்கிவிட்டு செல்லவும் அனைத்து அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.