முகில் தினகரனின் 'கூலிங் கிளாஸ் குமாரு' படித்தபிறகுதான், அந்த எம்.டி. 'இவன் மட்டும் ஏன் இப்படி கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறான்? இதற்கு ஏதாவது காரணம் இருக்குமே' என்ற கோணத்தில் யோசித்திருக்கலாமென்று தோன்றியது. சொல்லப்போனால் அந்த எம்.டி. க்கு கொஞ்சம் நுண்ணறிவு கம்மி என்றுதான் சொல்லவேண்டும். பரவாயில்லை, கூலிங்கிளாஸ் குமாருக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்!
உ.மு.ந. ராசன் கலாமணியின் 'மரம் வெட்டாதீர்கள்' சிறுகதையை படித்து, அந்த வனத்துறை அலுவலரின் ஊருக்குதான் உபதேசம் என்ற சுயநல எண்ணத்தை அறிந்து திடுக்கிட்டேன். எப்படியோ, அவரால் பலர் மரம் நடுகிறார்களே என்று நாம் திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்' தொடரில் இலக்கியா தீபக் பிரிவு, இப்படி வருடக்கணக்கில் நீளும் என்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவேயில்லை. வருத்தமாக இருக்கிறது. இப்போது இலக்கியாவை தீபக் பார்த்தும் ஏன் வரவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. அடுத்து இந்த தொடர் எப்படி போகுமென்று கணிக்கவே முடியவில்லை.
அட, அப்படியாயென்று வியந்துப் போனேன்! 'தமிழர் நாகரீகத்தின் தலை நகரம் காரைக்குடி! ஏன் எப்படி???' என்ற நல. ஞானபண்டிதனின் தொகுப்பை படித்து! அடேயப்பா... எத்தனை எத்தனை தகவல்கள்!
கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என சொன்னவர் காந்தி. அந்த கிராமங்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளை தந்தவர் ஜே.சி. குமரப்பா என்பதை படித்தபோது அவரின் பெருமையை புரிந்துக்கொள்ளமுடிந்தது. இவருடைய சிந்தனைகளை அப்போதே சரியான முறையில் செயல்படப்பட்டிருந்தால், உலகம் இந்தளவுக்கு ரசாயன பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்காது. உலகம் இன்னும் தூய்மையாக இருந்திருக்கும்.
வே.கல்யாண்குமாரின் 'புகையிலை' கவிதையை எல்லோரும் படித்து, சிந்தித்து இதன்படி நடந்தால் எல்லோரும் இன்னும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது நாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற நல்ல கவிதை.
இழப்பை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டேயிருந்தால், எதுவும் நடக்காது. அதிலிருந்து மீண்டு எழவேண்டும். இதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது 'மனதுக்கு சக்தி கொடுக்கும் மந்திரம்' என்ற தகவல்கள்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.