tamilnadu epaper

ஸ்ரீ ராமரின் கல்யாண குணங்கள் ..

ஸ்ரீ ராமரின் கல்யாண குணங்கள் ..


ராமாயணம் மகாபாரதம் மிகப்பெரிய இதிகாசங்கள் ..இவற்றின் கதைகளை ஒரே வரியில் கூறுக என்று கேட்டால் ..ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ராமாயணம் ..ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் மகாபாரதம்  

என்பார்கள்.


ஸ்ரீராமன் எல்லாராலும் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் கல்யாண குணங்களே ..ராமாயணம் கூறும் அறநெறிகளை பின்பற்றுவதை விட மிகப்பெரிய வாழ்க்கை நெறி எதுவும் கிடையாது 


தந்தை சொல் மீறாத தனயன் ..

சிற்றென்னை "வனம் போ" என்று சொல்லும் போதும்.."மன்னவர் பணி என்றாகின் நும்பணி மறுப்பனோ .." 

என்று கூறிய பண்பாளன்.(தான் வனம் போகச் சொன்னால் மறுத்துவிடுவானோ ராமன் என்ற எண்ணத்தில் மன்னவர் போகச் சொல்கிறார் என்று கைகேயி கூறும்போது "இதைக் கூற மன்னவர் தேவையில்லை தாயே நீ கூறினாலே நான் போவேனே "என்கிறான். )தாய் தந்தை சொல்லை வேதவாக்காக மதிப்பதை அவனிடம் கற்றுக் கொள்ளலாம்.


பிறன்மனை நோக்காதவன். ஏக பத்தினி விரதன் தன் மனைவி காட்டுக்கு சென்ற போது கூட ஒரு மன்னனாக அவளைக் காட்டுக்கு அனுப்பியவன்.. ஒரு கணவனாக ..அவளை எண்ணி வாழ்கிறான்... அஸ்வமேத யாகத்தின் போது கூட இன்னொரு பெண்ணை அவன் நினைத்திருந்தால் மணந்திருக்கலாம். ஆனால் அவன்தான் ஏக பத்தினி விரதனாயிற்றே... .சீதையின் உருவத்தை பொற்சிலையாய் செய்து 

அருகில் அமர்த்தி யாகத்தை முடிக்கிறான்.. இதன் மூலம் அவன் மனைவி மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் அவள் அருகில் இல்லாத போதும் அவளுக்கு கொடுக்கும் மரியாதையும் புரிகிறது.


அயோத்தி மக்களின் நலன் மட்டுமே கருத்தில் கொண்ட மன்னன்..


"குகனோடு ஐவரானோம் " என்று எளிய படகோட்டியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டவன் ...சபரியின் அன்பை ஏற்றவன்.நட்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று கற்றுக் கொடுத்தவன் ..


நியாயத்திற்கு துணை நிற்பவன். அநீதி இழைக்கப்பட்ட சுக்ரீவனுக்கு துணையாய் நின்று வாலியை எதிர்த்து..போரில் அவனைக் கொன்று ...சுக்ரீவனுக்கு அவன் நாட்டையும் மனைவியையும் மீட்டுக் கொடுத்தான்.அடைக்கலம் என்று வந்தவனுக்கு நியாயத்தை வழங்கி நட்புக்கு உதாரணமாய் திகழ்ந்தவன்.


நல்ல நட்பை ஏற்பவன்.. அதனாலேயே எதிரிடமிருந்து வந்தவன் என்றாலும் விபீஷ்ணனின் நட்பை ஏற்கிறான் .


போர்க்களத்தில் கூட நியாய தர்மத்தை நிலை நாட்டியவன்ஆயுதம் இல்லாமல் ராவணன் நின்ற போது அவனுடன் போர் செய்ய பிரியமில்லாமல் "இன்று போய் நாளை வா " என்று கூறியவன் ..அத்துடன் செய்த தவறை திருத்திக் கொள்ள... அவன் சிந்திக்க கடைசியாக ஒரு நாளை ...சந்தர்ப்பத்தை ...ராவணனுக்கு ஈந்தவன்..


எந்த இடத்திலும் அறநெறி பிறழாமல் வாழ்ந்தவன் ஸ்ரீராமன்.. 


அதனாலேயே ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமர்

மேல் அதீத பிரேமை கொண்டார்.அசோகவனம்தனில் சீதையைக் கண்டு திரும்பிய ஆஞ்சநேயர் ராமர் மனம் குளிர 'கண்டேன் சீதையை" என்ற போது ..மனம் மகிழ ஆரத் தழுவிக் கொண்டவர் ..."வாரும் பிள்ளை அனுமாரே ...மழை தான் இப்போ.. வாடிய பயிருக்கு உபகாரம் செய்ய கண்டேன்.. அப்படி போலவே ஒன்று அறியேன் ஆலிங்கனம் ஐயா அனுமாரே .."என்றார்.


(உம்மை ஆரத் தழுவி கொள்வதை தவிர இப்போது என்னிடம் உமக்கு அளிக்கக் கூடியது எதுவுமில்லை என்று பொருள்படும்) 


இப்படி எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும் ,எந்த துன்பத்திலும் , அறநெறி பிறழாமல்...அருங் குணங்களுடன் வாழ்ந்ததாலேயே ஸ்ரீராமர் எல்லோர் மனதையும் கவர்ந்தவர்..அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அருங்குணங்கள் இவையாவும் .


 ஸ்ரீ ராம நாமம் சொல்லும் போது முன் செய்த தீவினை அகலும் ..முத்தி கிட்டும்.


ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 



தி.வள்ளி

திருநெல்வேலி.