அதிமுக ஊழல் கட்சி என்றால் செங்கோட்டையனை எதற்காக சேர்த்தார்?” - விஜய்க்கு தினகரன் கேள்வி
அதிமுக-வை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தவெக-வில் எதற்காக சேர்த்துக் கொண்டார்?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து நேற்று அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நானும் செங்கோட்டையனும் கடந்த 1986-ம் ஆண்டிலிருந்தே நண்பர்களாக பழகி வருகிறோம். அவர் தவெக-வுக்கு போவதற்கு முன்பும் என்னிடம் கூறிச் சென்றார். அந்த அடிப்படையில் தவெக கூட்டணிக்கு நான் வரவேண்டும் என அவர் விருப்பப்பட்டார். அவர் என்னை விட சீனியர் என்பதால், அவரது அழைப்பை மறுக்க முடியாமல் தயங்கித் தயங்கி வரவில்லை என்று சொல்லாமல், “பார்த்துக் கொள்வோம்” என்றேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு முன் டெல்லிக்கு சென்று வந்தபிறகு செங்கோட்டையனிடம் பேசினேன். பாஜக முக்கிய தலைவர்கள் உங்களைக் கேட்டார்கள் என்ற தகவலைக் கூறினேன். ஆனால் அவரோ, “அது எனக்கு சரிவராதுங்க” என்று கூறிவிட்டார். அவர் நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று உறுதியாக நம்பினார். நான் சூழ்நிலை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவில்லை.
மேலும், நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொன்னதாகவும் கூறுகிறார்கள். இன்று நினைத்தாலும் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சிக்காரர்கள் வலியுறுத்தினால் என் முடிவை மாற்றப்போகிறேன். முடிவெடுத்தால் போட்டியிடக் கூடாது என்பது சட்டமா? எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. உத்தரவிடவும் முடியாது.
அரசியல் என்பது சதி நிறைந்த துறை. தேவையில்லாத சகுனிகள், கூனிகள் இருப்பார்கள். அதையும் தாண்டி ஆரோக்கியமான நட்பு வேண்டும். ஒரு ஆரோக்கியமான ஆட்சி அமையவேண்டும், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தான் நான் இணைந்தேன். பழனிசாமியும் நான் இந்த கூட்டணிக்கு வர வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதிமுக-வை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தவெக-வில் எதற்காக சேர்த்துக் கொண்டார்? எனவே, தவெக-வின் நிலைப்பாடு என்பது என்ன என்பதே புரியவில்லை. வரும் தேர்தலில் என்டிஏ-வுக்கும் திமுக கூட்டணிக்கும் தான் போட்டி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“நாங்கள் கூட்டணி பற்றி எந்தக் கட்சியுடன் பேசினாலும் டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘உங்களுக்கு ஏதாவது செய்தி கிடைக்காதா என்று பார்ப்பீர்கள். செங்கோட்டையனும் தான் பல முறை டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்தார். அப்படியென்றால் அவருக்கு அழுத்தம் இருந்தா டெல்லி சென்றார். அவருக்கு இல்லாத அழுத்தம் எங்களுக்கு மட்டும் எப்படி வரும்? அதெல்லாம் ஆயிரம் சொல்வார்கள். நான் சூழ்நிலை காரணமாகவும் அழுத்தம் காரணமாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தேன் என்று செங்கோட்டையன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.