அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ‘‘வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், (இந்திய-அமெரிக்க) கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களப் பயன்படுத்தி, விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதில் அமரிக்காவுக்கு உள்ள சுதந்திரத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரிக் கொள்கையை நேற்று ரத்து செய்தது. அதன் பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப், ‘பிரதமர் மோடி எனது மிகவும் நல்ல நண்பர். இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும். இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா அதிகரிக்கும் என்று கடந்த மே 10, 2025 அன்று அச்சுறுத்தியதன் காரணமாக, அவர் (பிரதமர் மோடி) தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது வேண்டுகோளின் பேரிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்...’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி 2, 2026 அன்று அறிவித்தார். மோடியின் வேண்டுகோளுக்காகவே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்பந்தத்தை ஏற்றதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
எதற்காக ட்ரம்ப்புக்கு மோடி வேண்டுகோள் விடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது? அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகையில் தனது "நல்ல நண்பரை" தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஏன் கவனத்தை சிதறடிக்கச் செய்தார்?
பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு ஆர்வம் காட்டாமல், இன்னும் 18 நாட்கள் காத்திருந்திருந்தால், இந்திய விவசாயிகள் இந்த துன்பத்திலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் தப்பித்திருக்க முடியும்.
மேலும் இந்தியாவின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட்டிருக்கும். பிரதமரின் பொறுமையின்மை மற்றும் சரணடைதல் காரணமாக இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டுக்கு ஒரு கடினமான சோதனையாக மாறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
‘டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி’ - உளவுத் துறை எச்சரிக்கை
புது டெல்லி: தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஒரு கோயிலை பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் எனவும் உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை இலக்காகக் கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்குப் பழிவாங்க லஷ்கர்-இ-தொய்பா முயற்சிப்பதாகவும், இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கண்காணிப்பில் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 10 அன்று டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகில் நடந்த ஒரு பயங்கரமான கார் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1-க்கு அருகில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு கார் வெடித்ததில் அருகிலுள்ள பல வாகனங்கள் வெடித்து சிதறின.