சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவரிடம் பேசியதாக சென்னை திரும்பிய ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். அதிமுகவை ஒன்றிணைக்காவிட்டால், மக்கள் விரும்பும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, அவர் டெல்லி சென்றார். ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லிக்கு சென்றிருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் நேற்று சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளார்.
இதை தொடர்ந்து, நேற்று இரவு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்த ஓபிஎஸ், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அவரிடம் விவாதித்தேன்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மழை பெய்ததும் உடனுக்குடன் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உடனடியாக வழங்கப்படும். ஆனால், தற்போதைய திமுக அரசு அதில் சுணக்கம் காட்டுகிறது. இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?