எப்ஸ்டீன் கோப்புகள்: மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்! ஐ.நா. அறிக்கை!

எப்ஸ்டீன் கோப்புகள்: மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்! ஐ.நா. அறிக்கை!


 

எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.


மேலும், இது உலகளாவிய அமைப்பாக செயல்பட்டிருப்பதாகவும், அனைவருக்கு எதிராகவும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தபட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைதான பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு கடந்த 2025 நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.


இதையடுத்து, கடந்த ஜன.30 அன்று 35 லட்சப் பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்தக் கோப்புகளில் உள்ளவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக ஆய்வு செய்த ஐ.நா.வின் நிபுணர்கள் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


”பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சித்திரவதை, மனிதாபிமானமற்ற வன்கொடுமைகள் போன்றவை சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான குற்றங்களுக்கு கீழ் வருகின்றன. பல குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் சட்ட வரம்புக்குள் வருகின்றன.


அனைத்து தகுதிவாய்ந்த தேசிய மற்றும் சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்த கொடுமைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும்.


இயற்கைக்கு மிகவும் மோசமான இதுபோன்ற குற்றங்கள் இவ்வளவு காலமாக எவ்வாறு நடந்திருக்க முடியும் என்பது குறித்து சுயாதீனமான, பாரபட்சமற்ற முழுமையான விசாரணை தேவை.


குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்கள், ராஜிநாமா செய்வது மட்டும் பொறுப்புக்கூறலுக்கு போதுமானதாக இருக்காது. குற்றவாளிகளுக்கு எதிராக அரசுகள் தீர்க்கமாக செயல்பட வேண்டியது அவசியம். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களோ, சக்திவாய்ந்தவர்களோ யாரும் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%