எம்பிபிஎஸ் சீட் கிடைக்காததால் வாதாடிய மாணவன்: 7 நாளில் இடம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜபல்பூர்: மத்திய பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் அதர்வா சதுர்வேதி (19), நீட் தேர்வில் 530 மதிப்பெண் பெற்றார். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரான (இடபிள்யூஎஸ்) அவருக்கு, அந்த பிரிவில் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படவில்லை.
ம.பி.யில் இடபிள்யூஎஸ் பிரிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படாததே இதற்குக் காரணம். இதனால் அதர்வா, தனது தந்தை வழக்கறிஞர் மனோஜ் சதுர்வேதியின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (Special Leave Petition – SLP) ஆன்-லைனில் தாக்கல் செய்தார். சிறப்பு அனுமதி மனு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 136-ன் கீழ், கீழ் நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் ஒரு சட்ட நடவடிக்கையாகும்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் வாதிட 10 நிமிட அவகாசத்தை மட்டுமே கோரினார் அதர்வா. இடபிள்யூஎஸ் பிரிவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிடுவதற்கான காரணங்களை அதர்வா அடுக்கினார்.
அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து அரசியலமைப்பு சட்டத்தில் 142-வது பிரிவின் கீழ் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதர்வாவுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், மத்திய பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?