எஸ்.பி.முத்துராமன், எம்.என்.ராஜத்துக்கு கலைஞர் நினைவு ‘‘கலைத்துறை வித்தகர்’’ விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எஸ்.பி.முத்துராமன், எம்.என்.ராஜத்துக்கு கலைஞர் நினைவு ‘‘கலைத்துறை வித்தகர்’’ விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
‘‘ஆளாக்கிய ஏவிஎம் சரவணன் இல்லையே’’... எஸ்.பி.எம். ஆதங்கம்
சென்னை, பிப்.–-
தமிழ்ப் படவுலகின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், மூத்த திரைப்பட இயக்குனர்எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’’ வழங்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவையில் 27.4.2022 அன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2022–ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளரான ஆரூர்தாசுக்கும், 2023–ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும்,
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக 2023ஆம் ஆண்டுக்கு மட்டும் கூடுதலாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.
குழந்தை நட்சத்திரம்
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949–ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான இவர், 1950கள் மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் அரங்கேற்றம், ஊருக்கு உழைப்பவன், போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் தாயார், மாமியார் போன்ற பல்வேறு துணை வேடங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர். நீண்டகால கலைச் சேவைக்காக எண்ணற்ற விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் 2024–ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3 எழுத்து: எஸ்பிஎம்
எஸ்.பி. முத்துராமன் பிரபலமாகஎஸ்.பி.எம். என்று அழைக்கப்படுபவர், தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1935 ஏப்ரல் 7–ம் தேதி காரைக்குடியில் பிறந்த இவர், 1960–ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராகத் தொடங்கி, பின்னர் 1970கள் முதல் 1990கள் வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குநராக உயர்ந்தார். 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.
இவரது சிறந்த படங்களில் ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி (1977), ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1978), முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் (1982), சகலகலா வல்லவன் (1985) போன்றவை முக்கியமானவை. தமிழ் திரைப்படத் துறைக்கு அளித்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற இவர், தமிழ் சினிமாவின் வணிக வெற்றியை தீர்மானித்த மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
கலைத்துறையில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் சிறந்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இவர் 2025–ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் ஆகிய இருவருக்கும் முதலமைச்சரால் ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.