தில்லியில் நடைபெறும் ஐந்து நாள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் மத்திய அரசின் நிர்வாகக் குளறுபடியால் நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இந்தியாவின் மின்னணு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க முடியும். ஆனால் இந்த மாநாட்டில் மத்திய அரசின் நிர்வாகக் குளறுபடியால் நாட்டுக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விளம்பர ஆசை மிகுந்த மத்திய அரசின் செயலே காரணம்.
செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் முதல் நாளிலேயே பிரதமர் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு காட்டிய அதீத ஆர்வம் காரணமாக உச்சிமாநாட்டை நடத்தியவர்கள், அதில் அரங்கு அமைத்தவர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு சிரமம் ஏற்பட்டது.
உச்சிமாநாட்டில் அரங்கு அமைத்தவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகிய வசதிகள் செய்து தரப்படவில்லை. அவர்கள் காட்சிக்கு வைத்த பொருள்கள் திருடப்பட்டன. மடிக்கணினிகள், தனிப்பட்ட மின்னணு சாதனங்கள், பார்வையாளர்கள் கொண்டுவந்த கைப்பைகள் ஆகியவற்றுக்கு உச்சிமாநாட்டில் தடை விதிக்கப்பட்டது. அங்கு விற்கப்பட்ட சாதனங்களை வாங்குவதற்கு மின்னணு மூலம் பணம் செலுத்தும் முறைக்கு பதிலாக ரொக்கப் பரிவரித்தனை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
மத்திய அரசின் திறமையின்மை காரணமாக உலக அளவில் நமக்கு தலைகுனிவு ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். பெங்களூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. மோடி அரசு உச்சிமாநாடு நடத்தும் விதத்தை அதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கார்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நோக்கங்களை எடுத்துக் காட்டியிருக்க வேண்டிய ஏஐ உச்சிமாநாடு பரிதாபகரமான தோல்வியில் முடிந்துள்ளது. இது பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வாக மாறிவிட்டது.
உச்சிமாநாடு நடைபெறும் பிரதான மண்டபம் பிரதமர் வருகைக்காகப் பார்வையாளர்கள் யாரும் பங்கேற்காத நிலையை அடைந்தது. உச்சிமாநாட்டில் பங்கேற்றவர்களிடம் பாதுகாப்புப் பணியாளர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர்.
அரங்குகளை அமைத்தவர்கள் அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அரங்குகளை அமைப்பதற்கு அவர்கள் ஏற்கெனவே பணம் செலுத்தியிருந்தும் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
உச்சிமாநாட்டில் மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு அரங்குகளில் கூட ரொக்கப் பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சிமாநாடு நடைபெறும் பிரதான மண்டபம் பிரதமர் வருகைக்காகப் பார்வையாளர்கள் யாரும் பங்கேற்காத நிலையை அடைந்தது. உச்சிமாநாட்டில் பங்கேற்றவர்களிடம் பாதுகாப்புப் பணியாளர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர்.
அரங்குகளை அமைத்தவர்கள் அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அரங்குகளை அமைப்பதற்கு அவர்கள் ஏற்கெனவே பணம் செலுத்தியிருந்தும் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
உச்சிமாநாட்டில் மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு அரங்குகளில் கூட ரொக்கப் பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.