சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்... காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில்.
இந்தக் கோயிலுக்குத் திருத்தேர் ஒன்றையும் செய்ய விரும்பினார் பெரியமருது. பாகனேரி எனும் ஊரைச் சார்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரை வரவழைத்து அவரிடம் தேர்ப் பணியை ஒப்படைத்தார். திருத்தேர் விரைவில் தயாரானது!
அன்று தேரோட்டம். உரிய பூஜைகள் நடந்தேறியதும் ஊர்மக்கள் கூடி தேரை இழுத்தனர். ஆனால், நிலையில் இருந்து ஓர் அடிகூட தேர் நகரவில்லை! பெரியமருதுவுக்கு அதிர்ச்சி. அவர், குப்பமுத்து ஆசாரியை ஏறிட்டார்.
”தேர் செய்ததற்கான காணிக்கையை இன்னும் வழங்கவில்லையே!”- தயங்கி தயங்கிச் சொன்னார் குப்பமுத்து.
”சரி, என்ன வேண்டும்?” – பெரியமருது.
”என்ன கேட்டாலும் தருவீர்களா?”
”நிச்சயம் தருகிறேன்!”
சற்று நேரத்தில் மௌனமாக இருந்த குப்பமுத்து ஆசாரி பிறகு சொன்னார்: ”இன்று ஒரு நாள் மட்டும் உங்களது அரச பதவியை எனக்கு வழங்க வேண்டும். உடையில் இந்தத் தேரில் அமர்ந்து பவனி வர வேண்டும்!”
கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், பெரியமருது கோபம் கொள்ளவில்லை. அந்தக் கணமே தனது செங்கோலையும் அரச உடைகளையும் ஆசாரியிடம் அளித்தார். அவற்றை அணிந்து, செங்கோலைக் கையில் ஏந்தியவாறு தேரின் அருகில் சென்ற குப்பமுத்து ஆசாரி... ஏதோ பழுது பார்த்தார். பிறகு, மேலே ஏறி கம்பீரமாக அமர்ந்தார். தொடர்ந்து… மக்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் பவனி ஆரம்பமானது.
தேரில் அமர்ந்திருக்கும் குப்பமுத்து ஆசாரியைக் கண்டு சிலர் கேலி செய்தனர். ஆனால், அதற்கு மாறாக பெரியமருதுவோ 'குப்பமுத்து பாண்டியர்...' என்று குரல் எழுப்ப... அரச பரிவாரங்களும் உடன் வந்தவர்களும், 'வாழ்க வாழ்க!' என்று வாழ்த்து கோஷம் எழுப்பியபடி தேரைப் பின்தொடர்ந்தனர்.
ரத வீதிகளைக் கடந்து, நிலையை நெருங்கியது தேர். ஆனால் அங்கு நிற்காமல் தொடர்ந்து ஓடியது. உடனே, அதன் நான்கு சக்கரங்களிலும் கட்டைகளைப் போட்டு தடை ஏற்படுத்த முயன்றனர். இதனால் தேர் பெரிதும் குலுங்க, நிலைதடுமாறி கீழே விழுந்தார் குப்பமுத்து ஆசாரி. அவர் மீது தேர்ச் சக்கரங்கள் ஏறி- இறங்க உடல் நசுங்கி இறந்தார் ஆசாரி.
கண்முன் நிகழ்ந்த அசம்பாவிதத்தைக் கண்டு விக்கித்து நின்றார் மன்னர் பெரியமருது. அப்போது அங்கு வந்த அரசவை வைத்தியர், பெரியமருதுவிடம் ஒரு கடிதத்தை அளித்தார். அது, குப்பமுத்து ஆசாரியால் முன்பே எழுதப்பட்டது. கடிதத்தைப் பிரித்துப் படித்தார் பெரிய மருது. அதில்…
ஐயா... தேர்ப் பணி இனிதே நிறைவேற முதலில் விநாயகர் திருவுருவைச் செதுக்குவது வழக்கம். ஆனால், இந்த முறை வலம்புரி விநாயகர் திருவுருவை மூன்று முறை செதுக்கியும் அந்த துதிக்கை சிதைந்தது கண்டு அதிர்ந்தேன். 'இதுபோல் நடந்தால், தேரோட்டத்தன்று அந்த நாட்டின் அரசன் இறப்பான்!' என்று சிற்ப நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து, உங் களைக் காப்பாற்றவே 'ஒரு நாள் அரச பதவி'யைக் காணிக்கையாகப் பெற்றேன்!' என்றிருந்தது.
தனக்காக உயிர் நீத்த குப்பமுத்து ஆசாரியின் உயிர் தியாகத்தை நினைத்து உருகினார் பெரிய மருது. எதற்கும் கலங்காத அவரின் கண்கள் நீரைச் சொரிந்தன.

சிவ.முத்து லட்சுமணன்
போச்சம்பள்ளி