கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் தருமபுரியில் 48 பேருக்கு ரூ.1 கோடி கடன் உதவி
தருமபுரி கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம், கலெக்டர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் கலெக்டர் பேசுகையில், பெண்களின் பங்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் குறிக்கோளுடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன், கலைஞர் கைவினைத் திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், இவ்விரு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே பயன்பெற தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் மூலம், ரூ.10 லட்சம் வரை, 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி அவசியமில்லை. உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கான மானியத்துடன் கூடிய கடன் வசதி பெறலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ரூ.1.05 கோடி கடன் ஒப்பளிப்பு இம்முகாமில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பேருக்கு ரூ.19 லட்சம், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 23 பேருக்கு ரூ.11 லட்சம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.75 லட்சம் என, மொத்தம் 48 பேருக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை கலெக்டர் ரெ.சதீஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) பா.சுப்பையா பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.ராமஜெயம், மாவட்ட தொழில் மைய கடன் ஆலோசகர்கள் ஜே.சி.கிருஷ்ணன், கே.கருணாநிதி, மாவட்ட சமூக நல அலுவலர் கலாவதி, மாவட்ட தொழில் மைய மேலாளர் (கி.தொ (ம) நி) இரா.வாசுகி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள், தருமபுரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.