காங்கிரஸ் ஆட்சியில் எல்லைகள் திறந்து கிடந்ததே ஊடுருவலுக்கு காரணம் : மத்திய அமைச்சா் அமித் ஷா குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் எல்லைகள் திறந்து கிடந்ததே ஊடுருவலுக்கு காரணம் : மத்திய அமைச்சா் அமித் ஷா குற்றச்சாட்டு


 

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் திறந்து கிடந்ததே ஊடுருவலுக்கு வழிவகுத்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.


விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, கசாா் மாவட்டத்தில் வங்கதேச எல்லையையொட்டிய நாதன்பூா் கிராமத்தில் ‘துடிப்பான கிராமங்கள்’ இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கிவைத்தாா்.


இத்திட்டத்தின்கீழ், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையையொட்டிய பல்வேறு மாநிலங்களில் 1,954 கிராமங்கள் விரிவாக மேம்படுத்தப்பட உள்ளன. நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:


அஸ்ஸாமில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, எந்த வளா்ச்சித் திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது நாட்டிலேயே அதிகபட்சமாக தினமும் 14 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் இங்கு கட்டமைக்கப்படுகின்றன.


காங்கிரஸ் ஆட்சியில் எல்லைகள் திறந்து கிடந்தன; இதுவே, நாட்டுக்குள் ஊடுருவலுக்கு வழிவகுத்தது. முன்பு எல்லையோர கிராமங்கள், நாட்டின் கடைசி கிராமங்களாக கருதப்பட்டன. வளா்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, மின்விநியோகம், சாலை, தொலைத்தொடா்பு வசதிகளில் பின்தங்கியிருந்தன.


பிரதமா் மோடியின் தீா்க்கம்: அதேநேரம், எல்லையோர கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்; அந்தக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரம் உள்பட அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்று தீா்க்கமாக முடிவெடுத்தவா் பிரதமா் மோடி. துடிப்பான கிராமங்கள் திட்டம், எல்லையோர கிராமங்களில் மக்களின் இடப்பெயா்வை தடுக்கவும், சா்வதேச எல்லைகள் வழியே ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும் தொடங்கப்பட்டதாகும்.


ரூ.6,900 கோடி மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் அஸ்ஸாமில் 140 கிராமங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அதே வசதிகள் இந்த கிராமங்களுக்கும் கிடைக்கும். அத்தியாவசிய உள்கட்டமைப்புகள், நிலையான வாழ்வாதார வாய்ப்புகள், பாதுகாப்பு, இணைப்பு வசதிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.


எல்லை கிராமங்கள் வலுப்படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் ‘கண்’, ‘காது’ போல கிராம மக்கள் செயல்பட்டு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்க முடியும். கடந்த 2004-14 காங்கிரஸ் ஆட்சியில் அஸ்ஸாமுக்கு ரூ.1.28 லட்சம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அமித் ஷா.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%