கேரளத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
Dec 24 2025
24
ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலப்புழாவில், நெடுமுடி, செருத்தனா, கருவட்டா, கார்த்திகப்பள்ளி, அம்பலப்புழா தெற்கு, புன்னப்பரா தெற்கு, தகாழி மற்றும் புரக்காடு ஆகிய இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
கோட்டயத்தில், குருப்பந்தரா, கல்லுபுரய்க்கல் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஜே. சின்சு ராணி கூறுகையில்,
மத்திய ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகள் இரு மாவட்டங்களிலும் நோய் பரவியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் எங்கள் கவனத்திற்கு வந்தன.
மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, சோதனை முடிவுகளில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவலின் தீவிரத்தை துறை தற்போது மதிப்பிட்டு வருவதாகவும், கோழிப் பொருள்கள் நுகர்வுக்கு இதுவரை எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
மேலதிகப் பகுப்பாய்வுக்குப் பிறகு, தேவைப்பட்டால், கோழிகளை அழிப்பது மற்றும் கோழி இறைச்சி நுகர்வுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் விற்பனை வழக்கமாக அதிகரிப்பதால், கோழிப் பண்ணை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்தச்சமயத்தில் பொதுவாக, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
நோய் பரவலைத் தொடர்ந்து நிபுணர் குழுக்கள் ஏற்கெனவே களத்தில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டும் ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் இதேபோன்ற நோய் பரவல்கள் இருந்ததாக அமைச்சர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?