கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமண மாளிகை: ஸ்டாலின் திறந்து வைத்தார்

கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமண மாளிகை: ஸ்டாலின் திறந்து வைத்தார்


ரூ.17.47 கோடியில் பள்ளி, அமுதம் அங்காடிக்கு அடிக்கல்


சென்னை, டிச


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜம்புலிங்கம் சாலையில் 25.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.


மேலும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.


40,300 சதுரடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த முதலமைச்சர் அதனை பார்வையிட்டார்.


திருமண மாளிகையில் நிறுவப்பட்டுள்ள அண்ணாவின் மார்பளவுச் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.


இந்த திருமண மாளிகையின் தரைத்தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 435 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடம், இரண்டாவது தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான தங்கும் அறைகள், மின்தூக்கி வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.


15 ஜோடிக்கு திருமணம்


இப்புதிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் முதலமைச்சர் 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.


கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு 11.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 32,676 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன், 23 வகுப்பறைகள், 5 ஸ்மார்ட் வகுப்பறைகள், இயற்பியல், வேதியியல், கணினி மற்றும் அறிவியல் துறைகளுக்கான நான்கு நவீன ஆய்வகங்கள், தேர்வு மையம், நூலகம், ஆசிரியர்கள் அறை, அலுவலக அறை, கழிப்பறைகள், சிறார் விளையாட்டு பகுதிகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


மாணவர்கள் நன்றி


பின்னர், தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதற்காக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


கொளத்தூர், பெரியார் நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வந்த பழமையான அமுதம் அங்காடியை மேம்படுத்தும் வகையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 6.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,157 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், இடமகன்ற அமுதம் பல்பொருள் அங்காடி, அலுவலக அறை, பணியாளர்கள் அறை, சேமிப்பு கிடங்கு, மின்தூக்கி வசதிகள், நகரும் படிக்கட்டுகள், நவீன கழிப்பறைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ள அமுதம் அங்காடிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%