யார் ஒருவர் கோடி லிங்க தரிசனத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி அற்ற நிலை உண்டாகும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார். அனைவராலும் சுலபத்தில் கோடி லிங்க தரிசனத்தை காண இயலாது அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்தை யார் ஒருவர் தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் கோடி லிங்க தரிசனத்தை செய்த பலனை பெறுவார்கள். ஒவ்வொரு அரிசியும் சிவலிங்கமாக பாவிக்கப்பட்டு அன்றைய தினம் நாம் வழிபாடு செய்வதால் தான் கோடி லிங்க தரிசனத்தை நம்மால் அன்றைய தினம் செய்ய இயல்கிறது.
அன்னாபிசேக வரலாறு:
ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கி பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமானை போன்றே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்ற கர்வம் பிரம்மனுக்கு தோன்றியது. இதையடுத்து பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கைகை கவ்விக்கொண்டது. இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையைப் கவ்விக் கொண்ட பிரம்மனின் கபாலம் பிச்சை பாத்திரமாக மாறியது.
அந்த கபாலம் பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போது தான் சிவபெருமானின் கையை விட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்கு செல்லும் போது அன்னபூரணி அவருக்கு அன்னம் இடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னம் இட்ட தினம் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினமாகும். எனவே தான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமான் அன்ன அபிஷேக பிரியர். அதனால் சிவபெருமானுக்கு 11 வகையான பொருட்களான தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பு சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மையான பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.
இந்த நாளில் அன்னாபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும் மிகப் பெரிய புண்ணியம் வந்து சேரும்.

சிவ. முத்துலட்சுமணன் போச்சம்பள்ளி