புதுடெல்லி: வரும் 2026- 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில் கோயில் நகரங்கள், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 50 ஆன்மிக நகரங்கள் சர்வதேச சுற்றுலா மையங்களாக உருவாக்கப்பட உள்ளன. வடக்கு பிராந்தியத்தில், உத்தர பிரதேசத்தின் வாராணசி, மதுரா, உத்தராகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் சர்வதேச சுற்றுலா தலங்களாக உருவாக்கப்பட உள்ளன.
தெற்கு பிராந்தியத்தில் தமிழகத்தின் கோயில் நகரங்களாக அழைக்கப்படும் மதுரை, காஞ்சிபுரம் ஆகியவை சர்வதேச சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளன. ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான திருப்பதி, யுனெஸ்கோவின் உலக பராம்பரிய சின்னம் அங்கீகாரம் பெற்ற கர்நாடகாவின் ஹம்பி ஆகியவையும் சர்வதேச சுற்றுலா தலங்களாக உருவாக்கப்பட உள்ளன.
மேலும் ஒடிசாவில் புரி, மேற்குவங்கத்தில் விஷ்ணுபூர், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனி, கஜுராஹோ, குஜராத்தில் துவாரகா, மகாராஷ்டிராவில் பந்தர்பூர் ஆகிய ஆன்மிக நகரங்களும் சர்வதேச சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளன.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள புத்த வழிப்பாட்டுத் தலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுவதும் 15 அகழ்வாராய்ச்சி தலங்கள் சர்வதேச சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். புதிய திட்டங்கள் மூலம் இந்த எண்ணிக்கையை 10 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா துறை மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.43.25 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த துறையின் மூலம் 6.3 கோடி பேர் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். இதை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட்டில் சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு ரூ.2,438.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.