சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: கடலூர் கலெக்டர் ஆஜராக உத்தரவு
சிதம்பரம் அரசு பொது ருத்துவமனையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 18-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 73 வயதான முதியவர் சுப்பிரமணியன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிதம்பரம் நகராட்சி 4-வது வார்டில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தருவர். ஆனால், மருத்துவமனைக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களை நிறுத்துவதற்குக்கூட இடமில்லை. அந்த மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மருத்துவமனை வளாகத்துக்கான அடிப்படை கட்டுமானங்களை செய்ய முடியும்.
இதுதொடர்பாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் 2023 ஜூன் 7-ந் தேதி முதல் 2024 மார்ச் 8-ந் தேதி வரை நான்கு மனுக்களை மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் தாசில்தார், சிதம்பரம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. எனவே, சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் 56 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் வாதிடும்போது, சம்பந்தப்பட்ட இடம் சிதம்பரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிதம்பரம் நகராட்சிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது சிதம்பரம் நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நிலம் அரசு நிலம். அதனால், அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நகராட்சிக்கு வரி செலுத்தி வருகிறார்கள், என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலம், யாருடைய கட்டுப்பாட்டுக்கு வருகிறது? என்பதில் பிரச்னை உள்ளது. எனவே, உரிய ஆவணங்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 18-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.