சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தில் ஆவணங்கள் எரிக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்
Oct 19 2025
36
சென்னை, அக். 18–
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடா்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூா் கூட்ட நெரிசல் தொடா்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடியும் முன்னரே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிப்பதற்கு அனுமதி தந்தது யார்?. ‘பென்டிரைவைக்’ கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவுக்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?.
ஆவணங்களை எரித்தது ஏன்?
அவசரகதியில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி அதனை சுப்ரீம் கோர்ட் தடைவிதித்த உடன் ஆவணங்கள் ஏன் அழிக்கப்பட்டன?. சுப்ரீம் கோர்ட்டோ அல்லது ஏதேனும் சட்டமோ ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிறதா?. இப்படி, ஆவணங்களை எரிப்பது எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற? என மனதில் பல கேள்விகளும் எழுகின்றன.
கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முதலில் மறுத்தது. பின்னர், பேரவையில், அமைச்சர்கள் அவசரகதியாக மாற்றி மாற்றி கருத்துகளைத் தெரிவித்தனர். தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன. எனவே, ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மதுரை முறைக்கோடு
மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தவுடன் மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்திருப்பது கடும் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவ்விவகாரத்தில் மேயரின் கணவர் கைதாவதையும், மேயர் ராஜினாமா செய்வதையும் பார்க்கும் போது, இவ்விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?