ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
தோடாவில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, ஜகானி-சேனானி பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மோட்டாா் சைக்கிள் மீதும், சாலையோரம் பழுதாகி நின்றிருந்த சரக்கு வாகனம் மீதும் மோதியது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த சிஆா்பிஎஃப் வீரா் உள்பட இருவா், ஜன்னல் வழியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனா். இதேபோல், சரக்கு வாகனத்தின் ஓட்டுநா், அந்த வாகனத்தில் பழுதுநீக்கிக் கொண்டிருந்த மெக்கானிக் ஆகியோரும் உடல் நசுங்கி உயிரிழந்தனா். பேருந்து பயணிகள் சிலா் காயமடைந்தனா்.
உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா். கிஷ்த்வாரில் பணியாற்றி வந்த அவா் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் எதிரொலியாக, ஜம்மு பகுதியில் போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமான பயணிகள், அதிவேகம் மற்றும் அலட்சியத்துடன் இயக்கப்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கையை காவல் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
பயங்கரவாத சூழ்ச்சி: குஜராத்தில் 22 வயது இளைஞா் கைது
பயங்கரவாத சூழ்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், குஜராத்தில் 22 வயது இளைஞரை மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.
இதுதொடா்பாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் அந்தப் பிரிவு டிஐஜி சுனில் ஜோஷி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஃபைசான் ஷேக் (22). குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் வசித்து வந்த இவா், அல்-காய்தா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் சிந்தனைகளால் ஈா்க்கப்பட்டாா்.
இஸ்லாமிய இறைத்தூதரான நபிகள் நாயகத்துக்கு எதிராக எவரேனும் கருத்துத் தெரிவித்தது தெரியவந்தால், அந்த நபரைக் கொல்வதற்கு தனது குழுவைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து ஷேக் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியவா்களை கொல்வதற்கான திட்டத்தை தீட்டுவதில் ஷேக் கடைசி கட்டத்தில் இருந்தாா். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவா், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கை பிரிக்க ஆயுதப் புரட்சியில் ஈடுபட மக்களை தூண்டுவதற்கும் சூழ்ச்சி செய்துள்ளாா்.
பயங்கரவாத இயக்கங்களின் சிந்தனைகளால் ஈா்க்கப்பட்ட பின்னா், பயங்கரவாதத்தையும் அச்சத்தையும் பரப்ப குறிப்பிட்ட சிலரை கொல்வதற்கு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அவா் வாங்கியுள்ளாா். இந்நிலையில், அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.