தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு
திருச்சி:
தமிழகத்துக்கு நிபந்தனையின்றி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு வழங்கினார். திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் சார்பில் கோரிக்கை மனுவை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அதில் கூறியிருப்பதாவது: சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பதால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, 2024-25-ம் நிதியாண்டுக்கு நிலுவையில் உள்ள ரூ.2,151.59 கோடியையும், 2025-26-ம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும், பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்காமல் விரைந்து வழங்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள திண்டிவனம்-செஞ்சி -திருவண்ணாமலை, ஈரோடு பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை- தூத்துக்குடி, அத்திப்பட்டு- புத்தூர், மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் ஆகிய ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை பாதை பணியை துரிதப்படுத்தவும், திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளிக்கவும், கோவை- பல்லடம்- கரூர், கோவை-கோபி-பவானி- சேலம், மதுரை-மேலூர்- துவரங்குறிச்சி-விராலிமலை- இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் புறநகர் ரயில் சேவைகளை உச்ச நேரங்களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைக்கவும், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத மின்சார ரயில் பெட்டிகளை (EMU) கூடுதலாக ஒதுக்கீடு செய்யவும், தாம்பரம்- செங்கல்பட்டு 4-வது வழித்தடத்தை செயல்படுத்தவும், ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை (34.8 கி.மீ) ரூ.10,740.49 கோடியிலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை(32 கி.மீ) ரூ.11,368.35 கோடியிலும் மேற்கொள்ள தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில் கொள்கையின்படி மத்திய அரசும், தமிழக அரசும் 50:50 என்ற சம பங்களிப்பு அடிப்படையில் நிதியை விரைந்து வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். 1971-1975-ல் சேலத்தில் உருக்காலை அமைக்க 3,973.08 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது.
இதில் 1,503.44 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலத்தை பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை நிறுவுவதற்கு ஏதுவாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைத்தளப் பதிவில், “தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வை பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.