ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்பட உள்ளது.
ஜூலை 28ம் தேதி நாக சதுர்த்தியும், ஜூலை 29ம் தேதி நாக பஞ்சமியும் கொண்டாடப்பட உள்ளது. நாக சதுர்த்தி அன்று ஆடிப்பூரமும் இந்த ஆண்டு இணைந்து வருகிறது.
ஜூலை 29ம் தேதியான நாக பஞ்சமியை, கருட பஞ்சமி என்றும் வைணவ தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஜூலை 29ம் தேதியன்று அதிகாலை 01.23 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி அதிகாலை 02.29 வரை பஞ்சமி திதி உள்ளது.
நாக பஞ்சமி விரத, வழிபாட்டு முறைகள்:
காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ நாகங்களின் உருவங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
காய்ச்சாத பசும் பால் கொண்டு, தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் படைத்து வழிபடுவார்கள்.
- நாகத்துடன் இருக்கும் சிவலிங்கம், இரண்டு நாகங்கள் பின்னிய படி இருக்கும் உருவங்களுக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது உண்டு.
நாக பஞ்சமியில சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
1. "ஓம் சர்ப்பேப்யோ நமஹ..!!"
2. "ஓம் நமஹ சிவாய..!!"
3. "ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம், உருவருக்மிவ பந்தனன் மிருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்..!!"
நாக பஞ்சமி ஏன் கொண்டாடுறோம்?
நாக பஞ்சமி, பாம்புகளுக்கு நன்றி செலுத்தும் நாள் ஆகும். பாம்புகள் விவசாயிகளுக்கு நண்பர்கள். வயலில் இருக்கும் எலிகளை பாம்புகள் சாப்பிட்டு, பயிர்களை காக்கின்றன. ஆன்மிக ரீதியாக பார்த்தால் அம்பிகை, மகாவிஷ்ணு, சிவ பெருமாள், விநாயகர், முருகன் என அனைத்து தெய்வங்களுடனும் பாம்புகள் இருக்கும். அதனால் தெய்வீக அம்சம் கொண்ட நாகங்களை தெய்வங்களாக வழிபட்டால், அடுத்து வரப் போகும் மழைக் காலத்தில் அவைகள் நமக்கு தீங்கு செய்யாமல் இருக்கும். அதோடு நாக தேவதைகளை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற்றால் ஜாதகத்தில் இருக்கும் நாக தோஷங்கள் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நாக பஞ்சமி அன்று விரதம் இருந்தால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை மட்டுமோ அல்லது பால், பழம் மட்டுமோ சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். இதனால் திருமணத் தடை, திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள், குழந்தைப்பேறு தாமதமாவது உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும் .
நாகங்களை வழிபட்டால் தெய்வங்களுடன் இருக்கும் நாகங்கள், நம்முடைய கோரிக்கைகளை தெய்வங்களிடம் சொல்லி, அவை விரைவில் நிறைவேற ஆசி வழங்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
கவிதா சரவணன்.