பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் 276 பேர் கைது: என்.ஐ.ஏ., தகவல்
Jan 03 2026
10
சென்னை: 'நாடு முழுதும், கடந்த ஆண்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, 55 வழக்குகளில், 276 பேர் கைது செய்யப்பட்டனர்' என, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தேசிய புலனாய்வு முகமைக்கு, 2025 வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. குற்றவாளிகளுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத் தருவது, 92 சவீதமாக உயர்ந்தது.
கடந்த 2008ல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, சூத்திரதாரி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து, நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார். அமெரிக்காவில் பதுங்கி இருந்த, தாதா அன்மோல் பிஷ்னோவும் நாடு கடத்தி அழைத்து வரப்பட்டார்.
ஜம்மு ---- காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ல், நாட்டை உலுக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையிலும், தேசிய புலனாய்வு முகமை, முக்கிய வெற்றியைப் பெற்றது.
சுற்றுலாப் பயணியரை, மத அடிப்படையில் குறி வைத்து கொன்ற, மூன்று பயங்கரவாதிகள், என்.ஐ.ஏ., விசாரணைக்கு பின், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கிலும், என்.ஐ.ஏ., குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர். இதில் சம்பந்தப்பட்ட, ஒன்பது குற்றவாளிகள், இரண்டு மாதத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டில், பயங்கரவாதிகளுக்கு எதிராக, என்.ஐ.ஏ., பதிவு செய்த, 55 வழக்குகளில், 276 பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதிகளின், 12 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?