பற்றி எரியும் இந்தோனேசியா... ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் - பின்னணி என்ன?

பற்றி எரியும் இந்தோனேசியா... ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் - பின்னணி என்ன?

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றுதான் இந்தோனேசியா. உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு என்ற அடையாளம் கொண்டது. பூகோள ரீதியாக நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி. பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பூகம்ப பாதிப்புப் பகுதியில் அமைந்திருப்பதால், அந்த நாட்டுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. 2004 டிசம்பரில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் ஆசிய நாடுகள் பலவற்றில் சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை மறந்திருக்க முடியாது.


இயற்கைச் சீற்றங்கள் வெகுவாகவே இருந்தாலும் கூட சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற பாலி உள்ளிட்ட பல்வேறு குட்டித் தீவுகளைக் கொண்ட தீவு தேசம் இப்போது போராட்டத் தீ பற்றி எரியும் தேசமாக உள்ளது. கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போராட்டம் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.


இந்தோனேசியாவில் சமீப காலமாக பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. அந்த நாட்டு மக்களின் சராசரி வருமானம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் வெறும் ரூ.17 ஆயிரமாக உள்ளது. ஆனால், அங்கு எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த வாரம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தப் போராட்டம் தொடங்கியது. இந்தோனேசிய நாடாளுமன்றத்த முற்றுகையிட்ட பொது மக்கள், எம்.பி.க்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.


போராட்டம் வலுக்கவே, அங்கே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டக் களத்தில் போலீஸுக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த போலீஸ் வாகனம் ஒன்று தறிகெட்டோட, அது அங்கிருந்து உணவு டெலிவரி ஊழியர் ஒருவரின் உயிரைப் பறித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். மோதல் தீவிரமாக தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, ரப்பர் புல்லட்கள் மூலம் துப்பாக்கிச் சூடு என்று கலவர பூமியாக அப்பகுதி மாறியது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய தகவல் பரவ, இப்போது போராட்டம் படிப்படியாக நாடு முழுவதும் பரவி விட்டது.


இந்த நிலையில், இந்தோனேசியாவில் இன்று பெண்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். பிங்க் நிற உடையில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், கைகளில் துடைப்பதுடன் வந்திருந்தனர். ஒரு கையில் துடைப்பன், மறு கையில், “எம்.பி.க்கள் சம்பளம் குறைக்கப்பட வேண்டும்“, “காவல் துறை சீர்திருத்தம் தேவை”, ”அரசாங்கத்தின் போலி இனிப்பான வாக்குறுதிகளால் சர்க்கரை நோய்தான் வருகிறது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அரசு நிர்வாகத்தில் அழுக்கு சேர்ந்துவிட்டது. அதை துப்புரவு செய்யவே இந்த துடைப்பம் என்று கோஷமிட்டனர்.


பெண்கள் மட்டுமல்லாது இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், சமூக நல செயற்பாட்டாளர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். போராட்டக் களத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%