பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும்: ஒப்பந்தம் கையெழுத்து இந்திய நலன்களை பாதுகாப்பதில் உறுதி: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
கத்தார், செப். 18–
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதியைத் தாக்கியதாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என்ற முக்கிய ஒப்பந்தம் கையொப்பம் ஆக உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையொப்பமாகியுள்ளது. பாகிஸ்தான் அல்லது சவுதியை பிற நாடுகள் தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகின்றது.
இதையடுத்து, கத்தாருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, கடந்த வாரம் அந்நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் பயணம் மேற்கொண்டிருந்தார். தற்போது, சவுதியில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே கொண்டு வரப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில், பிற மத்திய கிழக்கு நாடுகளையும் இணைத்து நேட்டோ போன்ற அமைப்பு உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தால், இனி பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதியும் பதிலடி கொடுக்கும் என்ற சூழல் நிலவுகிறது.இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:–
சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையே முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது பரிசீலனையில் இருந்தது மத்திய அரசு அறிந்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு தாக்கம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்வோம். நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதையும், அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதையும் மத்திய அரசு உறுதியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.