புத்த, சமண மதத்தினர் புனித பயணம்: தமிழக அரசு நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Jul 19 2025
10

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் ( கோப்புப் படம்)
கோவை: புத்த, சமண, சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி பெற பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது: “தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
புத்த மதம்: பிஹாரில் உள்ள புத்த கயா, உத்திரபிரதேசத்தில் உள்ள குசி நகர், வாராணாசியில் உள்ள சாரநாத் கோவில், பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, நோபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்கள்.
சமண மதம்: ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோயில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோயில், கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களள்.
சீக்கிய மதம்: பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீ கேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மகாராஷ்டிரா) போன்ற புனித தலங்கள். 2025 ஜூலை 1ம் தேதிக்கு பின் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2025 நவம்பர் 30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?