மண் எனும் மாமணியே

மண் எனும் மாமணியே


(டிசம்பர் 5 உலக மண் நாள்)

..........

 உனக்குத்தான் எத்தனை பெயர்கள் ?

 பூவாம்; காயாம் ; கூவாம்; கோவாம்!


உனக்குத்தான் எத்தனை ஓரவஞ்சனை!

உழுபவன் வீசினில்

அன்பளிப்பு தருகிறாய்,

 உதவாதென வீசினால் .

அழித்து விடுகிறாய் !


 உனக்குத்தான் எத்தனை பெரிய மனம்!

 அகழ்வாரைத் தாங்குகிறாய், 

அசிங்கத்தையும் தாங்குகிறாய்!


உனக்குத்தான் எத்தனை 

தயாள குணம்! 

உயிரினங்களுக்கு 

உன்மடி உறைவிடம், 

 அலையும் நீருக்கும் 

மலைக்கும் 

உன்னடி புகலிடம் .


 எத்தனை திருட்டுகள் 

செய்கிறாய் மண்ணே! 

விலைமதிப்பானதை மறைத்துவைக்கிறாய்


தோண்டி எடுத்தால்

 தந்துவிடப் போகிறாய் !


சினம் கொண்டு ஆடுகிறாய் !

 சிதைக்கவும் செய்கிறாய் !


மனித இன

நகரங்களைத் 

தாழிட்டுப்புதைக்கிறாய்;

 புதைந்த பெருமைகளை

 வெளிக்காட்டிச் சிரிக்கிறாய் !


 உன்னால்தான் பேசப்படுகிறது 

என்ஊர் பெருமை ;

என் இனத்தலைமை ;

 என்னவர் வீரம்;

 என்னுள் வீசுகிறது

 உன் மொழி வாசம்!


 தவழ்ந்தால்

 தாங்கிக் கொள்கிறாய் !

விழுந்தால் தட்டிக் கொடுக்கிறாய்!

 எழுந்தால் 

உயர்த்தி விடுகிறாய் !  

படுத்துவிட்டாலோ 

உறங்க வைக்கிறாய்


என் பிறப்பும் 

என் இறப்பும் உன்னிடம் !


என்வாழ்வும் 

என் வளர்ச்சியும் 

உன்னிடம் !


ஆவதும் மண்ணாலே அழிவதும்

மண்ணாலே இயற்கையே! இறையே !


மண்ணைப் போற்றுதும்! மண்ணைப் போற்றுதும்!!

 மண்எனும்மாமணியே உன்னைப் போற்றுதும்!



திருமதி. இரா.இராஜாமணி

ஈரோடு

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%