மத்திய அரசின் பாரத் டாக்ஸி! 30% குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ, பைக் பயணம்..!

மத்திய அரசின் பாரத் டாக்ஸி! 30% குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ, பைக் பயணம்..!


 

ஓலா, உபர் போன்ற செயலிகளுக்கு போட்டியாக பாரத் டாக்ஸி செயலியை மத்திய கூட்டுறவுத் துறை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.


இந்த செயலி மூலம் கார், ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்கள் பெறும் தொகையில் எந்த பிடித்தமும் (கமிஷன்) செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தில்லியில் பாரத் டாக்ஸி செயலியை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கிவைக்கவுள்ளார்.


முதல்கட்டமாக 2.5 லட்சம் வாகனங்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஓலா, உபர், ரேபிடோ செயலிகளைப் போலவே பாரத் டாக்ஸி செயலியிலும் பைக், ஆட்டோ மற்றும் கார்களை புக் செய்யலாம். உள்ளூர், வெளியூர் மற்றும் ரவுண்ட் டிரிப் வசதிகளும் உள்ளன.


கமிஷன் கிடையாது


பாரத் டாக்ஸியை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் கமிஷன் அடிப்படையில் இல்லாமல் அவர்களே உரிமையாளர்களாக உள்ளனர். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் தொகையில் எந்த கமிஷனும் பிடித்தம் செய்யப்படாது.


அதற்கு பதிலாக செயலி பராமரிப்புக் கட்டணமாக ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு ரூ. 30 செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


30% வரை குறைந்த கட்டணங்கள்


தற்போதுள்ள ஓலா, உபர் போன்ற செயலிகளை விட பாரத் டாக்ஸி 30 சதவீதம் குறைந்த கட்டணத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் செயலிகள் ஒரு பயணத்துக்கு ரூ. 30 முதல் 50 வரை ஓட்டுநரிடமிருந்து கமிஷன் பெறுகிறார்கள். ஆனால், பாரத் செயலியைப் பயன்படுத்தும்போது அந்த கட்டணம் குறையும்.


பாதுகாப்பு நடவடிக்கைகள்



இந்த செயலியில் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும், பிரத்யேக உதவி எண்ணும் உள்ளன. கூடுதலாக, பயணிகளின் புகார்களை விரைவாகத் தீர்க்க தில்லி காவல்துறையுடன் இணைந்து 35 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் உள்ள ஓட்டுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டிருக்கும்.


வெற்றிகரமான முன்னோட்டம்


இந்த செயலி கடந்தாண்டு டிசம்பரில் தில்லி மற்றும் குஜராத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சோதனையில், நாள்தோறும் சராசரியாக 5,500 பயணங்களைப் பதிவு செய்தது. இதில் 4,000 விமான நிலையப் பயணங்களும் அடங்கும்.


மேலும், 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது.


அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களுளிலும் பாரத் டாக்ஸி செயலி விரிவடையவும். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக ஆதரவு மையங்களை நிறுவவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%