மத்திய அரசின் பட்ஜெட் மிகவும் மந்தமான பட்ஜெட்டாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: வேலை வாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நாட்டின் முன் எழுந்துள்ள பல சவால்களை மத்திய நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை. ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
முக்கியமான துறைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் செலவினம் குறைந்துள்ளது. மத்திய அரசின் மூலதனச் செலவு குறைந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு நிலவரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன.
நிதிப்பற்றாக்குறை சொற்ப அளவாக 0.1 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வியூகப்படி பார்த்தால் மத்திய பட்ஜெட் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு சற்றும் ஈடுகொடுக்காத மந்தமான பட்ஜெட்டாக இருக்கிறது. இதை மந்தமான பட்ஜெட் என்றே சொல்லலாம்.
நாட்டின் உண்மையான நெருக்கடி விஷயங்களுக்கு பட்ஜெட்டில் எந்தப் பதிலும் இல்லை. வேலையில்லாத இளைஞர்கள், உற்பத்தி வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்பப் பெறுதல், வீட்டு சேமிப்பு வீழ்ச்சியடைதல், துயரத்தில் இருக்கும் விவசாயிகள் உள்ளிட்ட நாட்டின் உண்மையான சவால்களை மத்திய அரசு கவனிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறும்போது, “நாட்டில் தலைவிரித்தாடி வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறித்து பட்ஜெட்டில் எந்தவித பதிலும் இல்லை. நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை. மேலும் மாநில வளர்ச்சிகளுக்காக பட்ஜெட்டில் ஒன்றுமே செய்யப்படவில்லை” என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?