மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தேர்தலுக்குள் முடிக்க நிர்ப்பந்தமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தேர்தலுக்குள் முடிக்க நிர்ப்பந்தமா?  அமைச்சர் சேகர்பாபு விளக்கம்



மதுரை, அக்.5-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை வரும் தேர்தலுக்குள் நடத்த வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நேற்று அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோவில் இணை ஆணையர் என்.சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி- 

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2009-ல் குடமுழுக்கு நடந்தது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று குடமுழுக்கு நடத்த 186 திருப்பணிகள் ரூ.23 கோடியே 70 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 117 பணிகள் ரூ8.90 கோடி கோயில் நிதியிலும், உபயதாரர் நிதி ரூ.14.80 கோடியில் 69 பணிகள் டிசம்பருக்குள் முழுமைபெறும். இதில் 2018 பிப்ரவரியில் தீவிபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்ததால், ரூ.35 கோடியே 30 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தேவையான 79 தூண்களில் 18 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. தேவையான 15 அடி நீள கற்கள் கிடைக்காமல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்னும் 61 தூண்கள் வரவேண்டியுள்ளது. மீதமுள்ள தூண்கள் அக்.15-க்குள் வந்துவிடும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

வீர வசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து குடமுழுக்கு நடத்தலாமா? என சிவாச்சாரியார்களிடம் ஆலோசித்து வருகிறோம். நடத்தலாம் என்றால் டிசம்பரிலேயே நடத்தி விடுவோம். வீர வசந்தராயர் மண்டபத்தோடு சேர்த்துதான் நடத்த வேண்டுமென்றால் பிப்ரவரிக்குள் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும். 18 உப கோவில்களில் 9 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளன. நவம்பருக்குள் 4 உபகோவில்களுக்கும், பிப்ரவரிக்குள் அனைத்து கோவில்களுக்கும் நடத்தப்படும். 2026 பிப்ரவரிக்குள் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும். வரும் தேர்தலுக்குள் குடமுழுக்கு நடத்த வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி எந்த கட்டாயமும் எங்களுக்கு இல்லை. தேர்தலுக்கும் எங்களது ஆன்மிக பணிக்கும் சம்பந்தம் இல்லை. போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் கையாள்வது திமுக அரசு. 

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%